சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு 400 துணை ராணுவப் படையினர்
சென்னை: சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு 400 துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மார்ச்18ம் தேதி சங்கரன்கோவிலில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி விட்டன. மேலும் பாதுகாப்புப் படையினரும் தங்களது பணிகளில் இறங்கி விட்டனர்.
வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா நடப்பதைத் தடுக்கும் வகையில் வாகன சோதனை, ஹோட்டல்கள், விடுதிகளில் சோதனை உள்ளிட்டவை நடந்து வருகின்றன.
தேர்தல் பணிகளைப் பார்வையிடுவதற்காக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் இன்று சங்கரன்கோவில் வருகிறார். சங்கரன்கோவில் தொகுதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வருவதால், இரு மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பிக்களுடன், அவர் ஆலோசனை நடத்துகிறார்.
தேர்தல் பாதுகாப்பில் மத்திய பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். மொத்தம் 5 கம்பெனி படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு கம்பெனியிலும் 80 படையினர் இருப்பார்கள்.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலிலும் இதே அளவிலான துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது அதே அளவில் சங்கரன்கோவிலிலும் மத்திய படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications