8ம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்
சென்னை: 8ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதில் பள்ளியில் படித்து தேர்வு எழுதுவோரை தவிர, தனித்தேர்வர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. மார்ச் 2ம் தேதி வரை வினியோகிக்கப்படுகின்றது.
முன்னதாக இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது,
8ம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித்தேர்வு எழுத உள்ளவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் சென்னை, கோவை, வேலூர், திருச்சி, கடலூர், நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் இருந்து பெற்று கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணத்தை வங்கியில் பெற்ற டி.டி.யாக செலுத்தக் கூடாது. கருவூலம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணமாக ரூ.125, செலுத்து சீட்டு, இதர ஆவணங்கள் ஆகியவற்றை மார்ச் 2ம் தேதி மாலை 5.45 மணி வரைக்குள் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் தேர்வு கட்டணம் ரூ.100, பதிவு கட்டணம் ரூ.10, மதிப்பெண் சான்றிதழ் ரூ.10, பணிக் கட்டணம் ரூ.5 என்று மொத்தம் ரூ.125 வசூலிக்கப்படுகிறது.
தகுதிகள்:
* தனித்தேர்வு எழுதுபவர்கள் 1.4.2012 அன்று 12.5 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதற்கான பிறப்பு சான்றிதழை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
* தேர்வுக்கான பாடங்கள்: 1.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்று. 2.ஆங்கிலம், 3.கணக்கு, 4.அறிவியல், 5.சமூக அறிவியல். இதில் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் மட்டுமே விடையளிக்க வேண்டும்.
* சென்னையில் வசிக்கும் தனித் தேர்வு எழுதுவோர் சென்னை தெற்கு, சென்னை கிழக்கு, மத்திய சென்னை, சென்னை வடக்கு தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* 2011-12ம் கல்வி ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசு பள்ளிகளில் நடத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பாடநூல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்கு தேர்வு எழுதுபவர்கள் விடையளிக்க வேண்டும்.
* 2010ம் ஆண்டு டிசம்பர் மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் தேர்வு எழுதி, ஒருசில பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்கள் 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடத்தப்பட உள்ள இருபருவத் தேர்வுகளுக்கு மட்டும் பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மேற்கூறிய இரு பருவங்களிலும் தேர்ச்சி பெறாதவர்கள் 2014ம் ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின்படி அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுத வேண்டும்.
வெற்று விண்ணப்பத்துடன் கூடுதலாக வழங்கப்படும் குறியீட்டு சீட்டுப் படிவத்தில் ஒட்டப்படும் புகைப்படத்தில் மட்டும் சான்றொப்பம் பெறக் கூடாது. இப்படிவத்தில் உள்ள புகைப்படமே மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications