பிரச்சாரத்திற்கு செல்லும் தலைவர்கள் பெயர் பட்டியலை 29ம் தேதிக்குள் தர வேண்டும்: பிரவீன்குமார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மக்கள் பிரதிநிதித்துவம் சட்டப் (1951) பிரிவு 77ல் கூறியுள்ளபடி, அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வதற்காக விமானம் அல்லது வேறு எந்த வகையான போக்குவரத்து வாகனத்தில் பயணம் செய்தால் அந்தச் செலவு, வேட்பாளரின் செலவுக் கணக்காக கருதப்பட மாட்டாது. எனவே, சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தால் அதிகபட்சம் 40 தலைவர்களும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக இருந்தால் அதிகபட்சம் 20 தலைவர்களும் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரசாரத்திற்கு செல்லும் கட்சித் தலைவர்களின் பெயர்களை தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நாளில் இருந்து ஒருவாரத்திற்குள் தர வேண்டும். அதன்படி சங்கரன்கோவில் சட்டசபை (தனி) தொகுதி அறிவிக்கை நாளை (22.2.2012) வெளியிடப்படுகிறது.
இந்த அறிவிக்கை வெளியிட்ட ஒரு வாரத்திற்குள் (29.2.2012) பிரசாரத்திற்கு செல்லும் கட்சித் தலைவர்களின் பெயர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு கொடுக்கப்படும் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும்போது ஆகும் பயண செலவு தவிர, பிரசாரத்திற்கான இதர செலவுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.