நடிகை குஷ்பு மீதான தேர்தல் வழக்கை விசாரிக்க தடை - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகை குஷ்பு, தமிழகம் முழுவதும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட விஜயனை ஆதரித்தும் அந்த தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி நடிகை குஷ்பு, விஜயன் ஆகியோர் மீது நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நத்தம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சட்ட விரோதமல்ல...
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில் ஆஜராக தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நடிகை குஷ்பு, விஜயன் ஆகியோர் மதுரை உயர்நீதின்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி டி.சுதந்திரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எம்.சுபாஷ்பாபு, மோகன்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
வாதத்தின்போது, "நடிகை குஷ்பு, விஜயன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 290 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரில், சட்டவிரோதமாக கூடியது தொடர்பாகவோ, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாகவோ எதுவும் கூறப்படவில்லை. தேர்தல் விதியை மீறியதாகவே புகாரில் கூறப்பட்டுள்ளது.
எனவே மனுதாரர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 290 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்," என்று வாதிட்டனர்.
இடைக்கால தடை
மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை குஷ்பு, தி.மு.க பிரமுகர் விஜயன் ஆகியோர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணைக்காக நத்தம் நீதிமன்றத்தில் இனி குஷ்பு ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.
இதே நத்தம் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு மீதும் தேர்தல் விதிமீறல் வழக்கு நடந்து வருகிறது. அவரும் இதே திமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்துதான் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.