வானிலை நிலவரம் செல்போனில் பெறும் வசதி விரைவில் அறிமுகம்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: இன்னும் சில ஆண்டுகளில் செல்போன்கள் மூலம் 1 மணிநேரத்திற்கு ஒருமுறை வானிலை குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் வானிலை மற்றும் தட்பவெப்பநிலை குறித்த தகவல்கள் டிவி சேனல்கள், செய்தித்தாள்கள், வானொலி உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் 10வது ஆண்டு விழாவில் பேசிய மண்டல வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் வை.இ.ஏ.ராஜ், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை வீதம் வானிலை குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதனை செல்போன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவி்த்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
வானிலை ஆய்வு மையம் மூலம் வானிலை நிலவரம் தற்போது தினமும் 2 முறை அறிவிக்கப்படுகின்றது. ஆனால் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின் போது 6 மணிநேரத்திற்கு ஒருமுறை தட்பவெப்பநிலை மற்றும் வானிலை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
அதேபோல டாப்ளர் ரேடார் என்ற கருவி மூலம் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை வானிலை தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். டாப்ளர் ரேடார் கருவி மூலம் 150 முதல் 500 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளை கண்காணிக்க முடியும்.
இதன் தகவல்களை செல்போன் வைத்திருப்பவர்கள் எஸ்எம்எஸ் மற்றும் இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். செல்போன்களின் மூலம் புயல், மழை, மேகமூட்டம், வெள்ளம் உள்ளிட்ட தகவல்களை ஒரு மணிநேர இடைவெளியில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
சென்னையில் ரேடார் செயல்படும் முறைகளை குறித்து வானிலை ரேடார் மைய இயக்குனர் பகுலயன் தம்பி விளக்கினார். அதன் பிறகு அவர் கூறுகையில், தற்போது நாடு முழுவதும் 19 டாப்ளர் ரேடார்கள் பொறுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. 12வது ஐந்தாண்டு திட்டத்தின்படி நாடு முழுவதும் 55 டாப்ளர் ரேடார்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காரைக்கால் மற்றும் ராமநாதபுரம் பகுதியில் டாப்ளர் ரேடார்கள் பொருத்தப்பட உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications