சென்னையில் என்கெளண்டர் நடந்த வீட்டில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை
சென்னை: சென்னையில் என்கெளண்டர் நடந்த வீட்டில் சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் கீதா ராணி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் துணிகரமாக கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஐந்து பேரையும் சென்னை போலீஸார் வேளச்சேரியில் ஒரு வீட்டில் சுற்றி வளைத்து சுட்டு வீழ்த்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் கீதா ராணா என்கெளண்டர் நடந்த வேளச்சேரி நேரு நகர் ஏஎல் முதலி 2வது தெருவில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு 3வது லேன் பிளாட் நம்பர் 335 வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது துணை போலீஸ் கமிஷனர் சுதாகரன், உதவி கமிஷனர்கள் மாணிக்கவேல், கண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக கிடந்ததை பார்த்த அவர் ஒவ்வொரு அறைக்கும் சென்று பார்வையிட்டு குறிப்புகள் எடுத்துக்கொண்டார். மேலும் போலீஸ் மீது கொள்ளையர்கள் சுடும் போது குண்டுகள் தவறி எதிர் வீட்டின் கண்ணாடி ஜன்னலை உடைத்துள்ளது. அதையும் மாஜிஸ்திரேட் பார்வையிட்டார்.
கொள்ளையர்கள் பயன்படுத்திய 2 பிஸ்டல்கள், 5 ரிவால்வர்களையும் மாஜிஸ்திரேட் பார்வையிட்டதோடு, சம்பவம் குறித்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடமும் விவரம் கேட்டார். பின்னர் இந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரு போலீசாரையும் மாஜிஸ்திரேட் நேரில் சந்தித்தார்.
இதற்கிடையில் 5 பேரின் உடல்களும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கொள்ளையர்களின் பெற்றோர்களிடம் உடல்களை ஒப்படைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications