சங்கரன்கோவிலை பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும்: ஜோதி முத்துராமலிங்க தேவர் கோரிக்கை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் முக்குலத்தோர் அதிகம் உள்ளதால் அதை பொது தொகுதியாக மாற்ற வேண்டும் என்று பசும்பொன் தேசிய கழக தலைவர் ஜோதி முத்துராமலிங்க தேவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தேவர் சமுதாய மக்களின் ஆதரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு எப்போதும் உண்டு. அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தேவர் சமுதாயத்திற்கு ஜெயலலிதா தொடர்ந்து ஆதரவு தருவார்.
பூலித்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும், பூலித்தேவர் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
சங்கரன்கோவில் முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதி என்பதால் அதை பொது தொகுதியாக மாற்ற தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்போம். இதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.