ரசிய பிரதமரை கொல்ல நடந்த சதி முறியடிப்பு - 2 பேர் கைது
ரசிய பிரதமரை கொல்ல நடந்த சதி முறியடிப்பு - 2 பேர் கைது
மாஸ்கோ: ரசிய பிரதமர் புதினை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ய நடந்த சதி முறியடிக்கப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரசியாவில் வருகிற மார்ச் 4-ந் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் புதின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்த நிலையில், பிரதமர் புதினை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி கொலை செய்ய நடந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாக ரசியாவின் சேனல் ஒன் தொலைக்காட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
இந்த சதித்திட்டத்தில் ஈடுபட முயன்ற தீவிரவாதிகளில் 2 பேர் உக்ரைன் நாட்டில் உள்ள ஒடேசா பகுதியில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், ஒருவர் பலியாகி விட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.
செசன்யா தீவிரவாதிகள்
கைது செய்யப்பட்டு உள்ள தீவிரவாதிகள் 2 பேரும் ரசியாவின் வடக்கு காகாஸஸ் பகுதியில் தனி நாடு கேட்டு தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் செசன்யா நாட்டு தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், புதினை கொலை செய்வதற்காக தீவிரவாதிகளை அனுப்பியது செசன்யா தீவிரவாதக் குழுவின் தலைவர் உமரோவ் என்பதும் தெரியவந்துள்ளது.