395.61 ஏக்கர், 162.58 ஏக்கர், 507 ஏக்கர் என பல ஏக்கர்..... நிலம் வாங்கியது சசிக்கு தெரியாதாம்!

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தற்போது சசிகலா வாக்குமூலம் அளித்து வருகிறார்.
கடந்த 4 நாட்களில் அவர் 172 கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். இதுவரை அளித்த வாக்குமூலத்தில், ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்களில் ஜெயலலிதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சசிகலா கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று நடந்த விசாரணையின்போது சசிகலா ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்காக பஸ் வாங்கியது உண்மை தான். அதற்கு காசோலை மூலமும், டிடி மூலமும் பணம் செலுத்தப்பட்டது. ஆனால் சாட்சியாளர் தனது வாக்குமூலத்தில் அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனை சந்தித்து அவர் மூலம் பணம் பெற்றதாக கூறுவது தவறானது. மேலும், அந்த பஸ்சை ஜெயலலிதா பார்வையிட்டார் என்று கூறியதும் தவறானது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி சாட்சிகளை மிரட்டி பொய்யான வாக்குமூலம் அளிக்க செய்துள்ளார் என்றார்.
சசிகலாவிடம் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:
நீதிபதி: திருநெல்வேலி, சென்னை உள்பட பல இடங்களில் ரிவர்வே ஆக்ரோ பார்ம் நிறுவனத்திற்காக நிலம் வாங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஏக்கர் நிலம் ரூ.2,000 என்ற விலையில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. 14.7.1994ல் ரூ.16,200 விலையில் 5.2 ஏக்கர் நிலம், நெல்லையில் ரூ.5.80 லட்சம் கொடுத்து 167.57 ஏக்கர் நிலம் வாங்கியது தெரியுமா?
சசிகலா: தெரியாது.
நீதிபதி: 28.8.1994ல் ராஜகோபால் என்பவர் மூலம் 53 ஏக்கர் நிலம் மற்றும் 1994 அக்டோபர் மாதம் 281 ஏக்கர் நிலம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோருக்கு தேவை என்று கூறி வாங்க முயற்சித்தது குறித்து?
சசிகலா: சாட்சி சொல்லியுள்ள நிலம் குறித்து எனக்கு தெரியாது. ஆனால் வழக்கில் தேவையில்லாமல் ஜெயலலிதாவை சம்மந்தப்படுத்தியுள்ளனர். இந்த சொத்து யார் வாங்கினார்கள் என்பது தெரியாது. ஆனால் போலீசார் வேண்டுமென்றே என்னுடைய பெயரையும், ஜெயலலிதா பெயரையும் சேர்த்து பொய் சாட்சி சொல்ல வைத்துள்ளனர்.
நீதிபதி: ரிவர்வே ஆக்ரோ பார்ம் நிறுவனத்திற்காக 17.11.1994ல் 281 ஏக்கர், 22.12.1994ல் 507 ஏக்கர், 6.1.1995ல் 166 ஏக்கர், 21.2.1995ல் 105.08 ஏக்கர் நிலம் வாங்கியது. 22.8.1994ல் 50 ஏக்கர், 17.11.1994ல் 73.90 ஏக்கர், 11.9.1994ல் 69.07 ஏக்கர், 17.9.1994ல் 60.59 ஏக்கர், 17.9.1994ல் 42.31 ஏக்கர், 10.11.1994ல் 34.80 ஏக்கர், 21.12.1994ல் 6.98 ஏக்கர், 22.12.1994 தேதியில் பல பேரிடம் 395.61 ஏக்கர். 4.1.1995ல் சிலரிடம் 162.58 ஏக்கர், 17.2.1995ல் சிலரிடம் 113.12 ஏக்கர் நிலம் வாங்கியது தெரியுமா?
சசிகலா: தெரியாது.
நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் ரூ.23.75 லட்சம் செலவில் சொகுசு பஸ் வாங்கியதாகவும், அதற்காக ஏற்பாடுகளை அப்போதைய போக்குவரத்து அமைச்சர் செங்கோட்டையன் மூலம் செய்ததாக கூறியுள்ள புகார் குறித்து?
சசிகலா: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொகுசு பஸ் வாங்கியது உண்மை. அதன் கட்டமைப்பு பணிக்காக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனத்திற்கு ஜெயா பப்ளிகேஷன் வங்கி கணக்கில் இருந்து செக் கொடுக்கப்பட்டது. ஆனால் சாட்சி கொடுத்தவர் தனது சாட்சியத்தில் அப்போதைய போக்குவரத்து அமைச்சர் செங்கோட்டையன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ் வாங்கியதாக சொல்லி இருப்பதில் உண்மை இல்லை. தேவையில்லாமல் தமிழக அரசை சேர்த்து பொய் சாட்சி சொல்ல வைத்துள்ளனர்.
நீதிபதி: அசோக் லேலண்ட் நிறுவனம் பஸ் கட்டமைப்பு பணி முடித்த பின், அதை சென்னையில் உள்ள ஜெயலலிதா வீட்டிற்கு கொண்டு சென்றதாகவும், பஸ் எப்படி உள்ளது என்பதை ஜெயலலிதா மற்றும் மற்றொரு பெண் சென்று பார்த்ததாக சாட்சி கூறியிருப்பது குறித்து தெரியுமா?
சசிகலா: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக பஸ் வாங்கப்பட்டது உண்மை. ஆனால் அதை ஜெயலலிதா வீட்டு முன் நிறுத்தியதாகவும், ஜெயலலிதா மற்றும் மற்றொரு பெண் சென்று பார்த்ததாகவும் சொல்வது சுத்த பொய்.
நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட பஸ்சுக்கான தொகையை தமிழக போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் கொடுக்கப்பட்டதாக சாட்சி கூறியிருப்பது குறித்து தெரியுமா?
சசிகலா: பஸ்சுக்கான தொகை ஜெயா பப்ளிகேஷன் நிறுவன வங்கி கணக்கில் இருந்து டிடி மூலம் கொடுக்கப்பட்டது. சாட்சி கூறியிருப்பது போல், அமைச்சர் செங்கோட்டையன் மூலம், தமிழக போக்குவரத்து கழக அமைச்சகத்தின் மூலம் கொடுத்தாக சொல்வது அப்பட்டமான பொய். மேலும் புதியதாக வடிவமைக்கப்பட்ட பஸ்சை ஜெயலலிதாவிடம் காட்டும்படி செங்கோட்டையன் கூறியதாக சொல்லி இருப்பதின் மூலம் பொய் சாட்சி சொல்ல வைத்துள்ளது தெரிகிறது.
நீதிபதி: சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் வீட்டு எண் 68 மற்றும் 69 ஆகிய வீடுகளை ரூ.90 லட்சம் கொடுத்து வாங்கியதாகவும், வீட்டிற்கான முன் தொகை ரூ. 10 லட்சம் கொடுக்கப்பட்டதாக ரமேஷ் என்பவர் கூறியுள்ள சாட்சி குறித்து தெரியுமா?
சசிகலா: ஆமாம், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்காக இரண்டு வீடுகள் வாங்கப்பட்டன. அதற்காக முன்பணம் வீட்டு எண் 68க்கு ரூ.4 லட்சமும், வீட்டு எண் 69க்கு ரூ.6 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வீட்டை நான் வந்து பார்த்ததாக சாட்சி கூறியிருப்பது பொய்.
நீதிபதி: மேற்கண்ட வீடுகளுக்கு மீதி தொகையை வி.என்.சுதாகரன் மூலம் 29.9.1994ல் கொடுத்து பதிவு செய்தது தெரியுமா?
சசிகலா: ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்காக சொத்து வாங்கப்பட்டது உண்மை. அதற்கான தொகை அந்நிறுவன வங்கி கணக்கில் இருந்து எடுத்து வீட்டு எண் 68க்கு ரூ.34 லட்சமும், வீட்டு எண் 69க்கு 46 லட்சமும் கொடுக்கப்பட்டது. இந்த பணம் எந்த வழியில் வந்தது என்பதை எழுத்து மூலமாக விளக்குவேன்.
நீதிபதி: மேற்கண்ட வீடுகளுக்கான தொகையை ஆந்திரா வங்கியில் செலுத்தப்பட்டதாக சாட்சி கூறியிருப்பது குறித்து தெரியுமா?
சசிகலா: மேற்படி சொத்தை வாங்கும்போது, அதன் உரிமையாளரான விஜயமாருதி பிக்சர்ஸ் நிறுவனத்தினர், அவர்களின் ஆந்திரா வங்கி கணக்கில் போடும்படி கேட்டு கொண்டதால், அதில் செலுத்தினோம்.
நீதிபதி: முனிசாமி, கைலாசம், முருகேசன், முருகன், முத்துராமன் உள்பட பலருக்கு சொந்தமான நிலங்களை ரிவர்வே ஆக்ரோ பார்ம் நிறுவனத்திற்கு வாங்கியது தெரியுமா?
சசிகலா: தெரியாது.
நீதிபதி: ராதா வெங்கடாசலம் என்பவரின் மாமனார் ராமசாமி உடையார் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அடிக்கடி அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சந்தித்து பேசுவது தெரியுமா?
சசிகலா: எனக்கு தெரியாது.
நீதிபதி: பீட்டர் கிரேட் ஜோன்ஸ் என்பவருக்கு சொந்தமான கொடநாடு டீ எஸ்டேட்டை ரூ.7.50 கோடிக்கு விற்பனை செய்வதாக கடந்த 1994ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் ராதா வெங்கடாசலம், அமுதா மற்றும் ஆண்டாள் ஆகியோர் விற்பனை பத்திரத்தில் கையெழுத்து போட்டது தெரியுமா?
சசிகலா: தெரியாது.
நீதிபதி: கொடநாடு டீ எஸ்டேட் நிறுவனத்திற்காக இந்தியன் வங்கியில் இருந்து ரூ.7.50 கோடிபே ஆர்டர் மூலம் டிடி கொடுக்கப்பட்டது தெரியுமா?
சசிகலா: தெரியாது.
நீதிபதி: குணபூஷண், குடபூஷண், அமுதா, ஆண்டாள் ஆகியோர் பீட்டர் கிரேட் ஜோன்ஸ் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டு, கொடநாடு டீ எஸ்டேட் நிறுனத்தில் இருந்து விலகுவதாக பீட்டர் ஜோன்ஸ் விடுதலை பத்திரம் எழுதி கொடுத்தது தெரியுமா?
சசிகலா: ஆமாம், அதற்காக கனரா வங்கி மூலம் ரூ.7.50 கோடி வரைவோலை கொடுக்கப்பட்டது. இதற்காக குணபூஷண், குடபூஷண் ஆகியோரிடம் காசோலை கொடுத்தது உண்மை.
நீதிபதி: பீட்டர் கிரேட் ஜோன்ஸ்க்கு சொந்தமான கொடநாடு டீ எஸ்டேட் நிறுவனத்தை ஒப்பந்தம் மூலம் வாங்கிய ராதா வெங்கடாசலம், அமுதா, ஆண்டாள் ஆகியோர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை இயக்குனர்களாக நியமிக்கப்பட்டதாகவும், சில மாதங்கள் கழித்து, அவர்கள் மூன்று பேரும் பங்குதாரரில் இருந்து விலகி உங்களை நிர்வாக இயக்குனராக நியமனம் செய்ததாகவும், கொடநாடு எஸ்டேட்டை நீங்கள் மற்றும் ஜெயலலிதா சென்று பார்த்தாக சாட்சி கூறியிருப்பது குறித்து தெரியுமா?
சசிகலா: கொடநாடு எஸ்டேட் நிர்வாக இயக்குனராக என்னை நியமனம் செய்தது உண்மை. ஆனால் ஜெயலலிதாவுடன் சென்று பார்த்தாக சொல்வது பொய்.
இன்றும் சசிகலாவிடம் விசாரணை தொடர்கிறது. நேற்றைய விசாரணையின்போது சுதாகரன், இளவரசியும் ஆஜராகியிருந்தனர்.
முன்னதாக நேற்று சசிகலா வாக்குமூலம் அளித்து கொண்டிருந்தபோது அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா குறுக்கிட்டு சசிகலா குறிப்புகளை எழுதி வைத்து கொண்டு அவற்றை பார்த்து வாசிக்கிறார். இதுபோல் குறிப்புகளை பார்த்து பதில் சொல்ல கூடாது என்றார்.
இதற்கு சசிகலாவின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்று குறிப்புகளை பார்த்து பதில் சொல்ல சட்டத்தில் இடம் உள்ளது என்றார்.
ஆனால், இதுபோன்று குறிப்புகளை எழுதி வைத்து கொண்டு பதில் அளிக்க கூடாது என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா சசிகலாவுக்கு உத்தரவிட்டுவிட்டார்.












Click it and Unblock the Notifications