ஓசூரில் பெண் என்ஜினியரை கடத்த முயன்ற 3 வாலிபர்களுக்கு தர்மஅடி
ஓசூர்: ஓசூரில் பெண் சாப்ட்வேர் என்ஜினியரை காரில் கடத்த முயன்ற 3 வாலிபர்களைப் பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பி.டெக். பட்டதாரியான 24 வயதுள்ள இளம்பெண் ஒருவர் ஓசூர் தர்கா பகுதியில் உள்ள சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று வேலைக்காக ஓசூர் வந்த அவர் எஸ்.எஸ்.காலனியையொட்டி நடந்து சென்றார்.
அப்போது அங்கு ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரில் வந்த வாலிபர்கள் அவரை கடத்த முயன்றனர். அதற்குள் இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் கூடினர். இதனை கண்ட கார் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். காரை சுற்றி வளைத்த பொதுமக்கள் இளம்பெண்ணை கடத்த முயன்ற 3 வாலிபர்களையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அதன்பிறகு சிப்காட் காவல் நிலையத்தில் வாலிபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் பொதுமக்களிடம் சிக்கியவர்கள் சென்னை விநாயகபுரம், கே.வி.ஆர்.அபார்ட்மென்ட் பகுதியை சேர்ந்த மகிதர் ரெட்டியின் மகன் சாய்கிரண்(24), வடபழனி அழகிரி நகரைச் சேர்ந்த சசிக்குமார்(24), கும்மிடிபூண்டி சக்திவேல் நகரைச் சேர்ந்த லோகேஷ் குமார்(20) என்பது தெரிய வந்தது.
மகாபலிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சாய்கிரணும், அந்த பெண்ணும் ஒன்றாக பி.டெக். படித்துள்ளனர். தற்போது உடன் படித்த பெண்ணை சாய்கிரண் தனது நண்பர்களோடு சேர்ந்து கடத்த திட்டமிட்டதும் விசாரணையி்ல் தெரிய வந்தது.
இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களின் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய திருப்பதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சிரஞ்சீவியை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications