சி.வி.சண்முகம் பி.ஏ. கொலை-ராமதாசின் உதவியாளரிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை

2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது, திண்டிவனத்தில் அதிமுக அமைச்சர சி.வி.சண்முகம் வீட்டில், பா.ம.கவினர் புகுந்து, கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். அமைச்சரைக் கொல்லவும் முயன்றனர். இதில் அமைச்சரைக் காப்பாற்ற முயன்ற அவரது உறவினர் முருகானந்தம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, மருமகன், தம்பி சீனு கவுண்டர் உள்ளிட்டோர் மீது திண்டிவனம் முதலில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் பெயர்களை நீக்கி விட்டு மற்ற 11 பேர் மீது மட்டும் வழக்குத் தொடர்ந்து கைது செய்தனர்.
வழக்கிலிருந்து ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் சிபிஐ விசாரணையையும் கோரியிருந்தார்.
அதை ஏற்று இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது நீதிமன்றம். நீண்டகாலமாக கிடப்பில் இருந்த இந்த வழக்கு சமீபத்தில் தூசி தட்டப்பட்டது.
ஜனவரி மாதம் 5ம் தேதி சிபிஐ அதிகாரிகள் இந்தக் கொலை வழக்கில், கோபி, இளஞ்செழியன், குமரன், நடராஜன், பன்னீர்செல்வம், ஜெயராஜ், ஆனந்தகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
ஜனவரி 25ம் தேதி, ராமதாசின் தம்பி சீனுவாசன், 2006ம் ஆண்டு தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட கருணாநிதி ஆகியோரையும் கைது செய்தனர்.
இந் நிலையில் இந்தக் கொலை தொடர்பாக ராமதாசின் உதவியாளர் நடராஜனிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திண்டிவனத்துக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழு, நடராஜனை சுற்றுலா மாளிகைக்கு அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இவரும் கைதாவாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications