பெரியாறு அணையை பராமரிக்க தமிழகத்தை அனுமதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அதிகாரிகளை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இரு புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளதுய. முதல் மனுவில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வழக்கமான பராமரிப்பு பணிகள் மே மாதத்துக்குள் உடனடியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள தொழில்நுட்ப நிபுணர்கள், அணைக்குத் தேவையான மின்சாரத்தைக் கேரள அரசு வழங்க வேண்டும், சிறிய அணைக்கும் (baby dam) முல்லைப் பெரியாறு அணைக்கும் இடையே பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்தது.
இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசுக்குக் கடிதம் எழுதியும் பதில் வரவில்லை. இந்தப் பராமரிப்பு மேற்கொள்ள வரும் தமிழக அரசு அதிகாரிகளைத் தடுக்கக் கூடாது என்று கேரள போலீஸார், வனத்துறை அதிகாரிகள், கேரள அதிகாரிகள் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தனது முதல் மனுவில் கோரியுள்ளது.
இரண்டாவது மனுவில், முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு கண்காணிப்பு கருவி அமைத்து ஆய்வு மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை. அணையின் உரிமை தமிழகத்திடம் உள்ளது. இந்த விவகாரத்தில் முன்பு இருந்த நிலையே தொடரும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இதனால் முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு கருவி அமைத்து ஆய்வு நடத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications