சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம்: வைகோ
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மக்கள் சக்தி பணநாயகத்தை வீழ்த்தும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சங்கரன்கோவில் தொகுதி மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து 2ம் கட்ட பிரச்சாரத்தை சங்கரன்கோவில் நகராட்சி 10வது வார்டில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துவங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது,
சங்கரன்கோவில் பகுதியில் 5,000 விசைத்தறிகளில் 15,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மின்தடையால் தற்போது இவர்களுக்கு வேலை கூட கிடைப்பதில்லை. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் சங்கரன்கோவிலில் முகாமிட்டுள்ளனர். கூலி உயர்வு கேட்டு 28 நாட்களாக தொழிலாளர்கள் போராடியபோது தொழிலாளர்களை அழைத்து பேசி முடிவு காண இந்த அமைச்சர்கள் வரவில்லை. அதி்முக அரசு பொறுப்பேற்று 3 மாதத்தில் மின்தடையை சரி செய்வோம் என்றது. ஆனால் இன்று மின்சாரமே இல்லாத நிலை உள்ளது.
நீங்கள் அதிமுகவுக்கு பாடம் கற்பித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் தேர்தல் இந்த இடைத்தேர்தல். மக்கள் சக்தி பணநாயகத்தை வீழ்த்தும். 32 அமைச்சர்களுக்கு இங்கு என்ன வேலை, இது சிந்திக்க தெரிந்த தொகுதி என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications