சங்கரன்கோவிலில் திருமங்கலம் பார்முலாவை புகுத்த நினைக்கும் அதிமுக: வைகோ குற்றச்சாட்டு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் இடைத்தேர்தலில் திமுகவின் திருமங்கலம் பார்முலாவை புகுத்த அதிமுகவினர் நினைக்கின்றனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சங்கரன்கோவில் தொகுதி மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் நேற்று மாலை பிரசாரத்தை துவக்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:
செங்கோட்டை ரயில்பாதை மீட்டர் கேஜ் பாதையாக இருந்தது. சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதி வியாபாரிகள் நலன் கருதி அதை அகல ரயில்பாதையாக மாற்றி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க செய்ய நடவடிக்கை எடுத்தேன்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திருமங்கலம் பார்முலாவை புகுத்த அதிமுகவினர் நினைக்கின்றனர். பணம் கொடுத்து ஓட்டுக்களை வாங்க நினைக்கிறீர்களே அது நீங்கள் உழைத்து சம்பாதித்த பணமா?
இந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டு பிரச்னையால் நெசவாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2,500 மெகாவாட் மின்சாரத்தை சென்னையில் உள்ள வெளிநாட்டு கம்பெனிகளுக்கு குறைந்த கட்டணத்தில் 24 மணிநேரமும் தங்குதடையின்றிவழங்குகின்றனர். ஆனால் பொதுமக்களுக்கு கொடுக்க மின்சாரம் இல்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் எவ்வித பயனும் இல்லை. நாடகத்தில் ராஜா வேஷம் போடுகிற ஆள் தான் மாறியுள்ளார். காட்சி மாறவில்லை. திமுகவினர் போன்றே அதிமுகவினரும் மணல் கொள்ளை, ஊழலில் ஈடுபடுகின்றனர். இந்த சதுப்பு நிலத்தில் இருந்து தமிழகம் மீட்கப்பட வேண்டாமா? மதுவின் போதையிலும், இலவசங்களின் போதையிலும் மக்களை திமுக, அதிமுக அரசுகள் தள்ளாட வைத்துள்ளன.
இந்த தேர்தலிலும் கோடி கோடியாக பணத்தை கொட்டினாலும் திமுக, அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டவேண்டும். மதிமுகவை வெற்றிபெறச் செய்து, ஜனநாயகத்தின் தீபத்தை உயர்த்துங்கள். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வெற்றியை இந்தியாவே திரும்பிப் பார்க்கும். இந்த தேர்தல் வெற்றி மூலம் அரசுக்கு மக்கள் ஷாக் கொடுக்கவேண்டும்.
இந்த தேர்தல் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் சொந்த ஊரான புளியம்பட்டிக்கு சென்றபோது அவரது தந்தையை சந்திந்து ஆசி பெற்றேன். ஆனால் அன்றே அவரது குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்துச் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வைத்து, அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக சொல்ல வைத்துள்ளனர். இந்த அரசு நம்மை பார்த்து மிரண்டு போயுள்ளது.
விலைவாசி உயர்வு, பஸ் கட்டணம், பால் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டணம் உயரப்போகிறது. இது தான் அதிமுக அரசின் சாதனைகளா? இந்த ஆட்சியின் அராஜக போக்கிற்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். வாக்காளர்கள் தான் நீதிபதிகள். இந்த தேர்தலில் மக்கள் மதிமுகவுக்கு அளிக்கும் வெற்றி சரித்திரத்தில் இடம்பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications