தேர்தல் விதிமீறல் வழக்கு: மொத்தம் 75, அதிமுக மீது மட்டும் 39
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மாதம் 16ம் தேதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தொகுதியில் மட்டுமின்றி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவதை கண்காணிக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்தல், கட்சி கொடிகளை கட்டுதல், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை அளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சங்கரன்கோவில் தொகுதியில் இதுவரை 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அதி்முக, திமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அதிமுக மீது 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 23 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக திங்கட்கிழமை வரை ரூ. 48.37 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 21 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications