திருச்சி அரசு மருத்துவமனையில் திவாகரன்.. மருத்துவ பரிசோதனை

திருவாரூர் மாவட்டத்தில் கஸ்துரி என்பவரின் வீடு இடிக்கப்பட்ட வழக்கு உள்பட இரு வழக்குகளில் திவாகரன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் திவாகரனின் மனைவி ஹேமலதா மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், என் கணவருக்கு சர்க்கரை நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளது. மேலும் அவருக்கு 1998ம் ஆண்டு இருதய ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. எனது கணவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது உள்ளது.
செலவை ஏற்கத் தயார்..
ஆனால் சிறையில் அதுபோன்று எந்த மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை. இதனால் என் கணவரின் உடல்நிலை மோசமாகி வருகிறது. எனவே திருச்சி கீதாஞ்சலி மருத்துவமனையிலோ அல்லது ஏதாவது ஒரு சிறப்பு மருத்துவமனையிலோ சிகிச்சைக்காக என் கணவரை சேர்க்க உத்தரவிட வேண்டும். அதற்கான மருத்துவ செலவை ஏற்க நான் தயாராக உள்ளேன் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், திருச்சி சிறைக் கண்காணிப்பாளர், திவாகரனை திருச்சி அரசு மருத்துவமனை டீன் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். இருதய நோய் சிகிச்சை நிபுணர், சர்க்கரை நோய் நிபுணர் ஆகியோரை கொண்ட குழு மூலம் திவாகரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன்பின்பு, திவாகரனின் உடல் நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் டீன் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையடுத்து திவாகரனை சிறைத்துறை போலீசார் இன்று திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அவருக்கு பரிசோதனைகள் நடக்கவுள்ளன.












Click it and Unblock the Notifications