பரபரப்பான சென்னை சிறைக் கலவரம்... 13 ஆண்டுக்குப் பின் குற்றச்சாட்டுப் பதிவு
சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சென்னை மத்திய சிறைக் கலவரம் மற்றும் அப்போது சிறை ஜெயிலர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட 27 பேர் மீது நேற்று குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
சென்னை மக்களால் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றுதான் சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரம். இந்தக் கலவரம் நடந்தது பழைய மத்திய சிறைச்சாலையில்.
அந்த சிறையில், பயங்கர தாதா பாக்சர் வடிவேலு 1999-ம் ஆண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டு இருந்தான். வயிற்றுப்போக்கு காரணமாக 16.11.99 அன்று இரவு அவனை சிறை மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் வடிவேலுவின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவனை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாக்சர் வடிவேலு 17ம் தேதி இறந்தான்.
ஆனால் பாக்சர் வடிவேலுவை சிறை அதிகாரிகள் அடித்துக் கொன்று விட்டதாக சிறைக்குள் தகவல் பரவி விட்டது. இதையடுத்து காலையில், சிறையில் கைதிகள் பெரும் கலவரத்தில் குதித்தனர். இந்த கலவரத்தின்போது ஜெயிலர் ஜெயக்குமார் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
இந்த கலவரம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசில் சிறைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் புகார் கொடுத்தார். பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
வெள்ளைரவி, பர்மா சீனு, கொடுக்கு, டிக்கி, திருவள்ளூர் விஜி உள்பட பலர் ஒன்று சேர்ந்து, துணை ஜெயிலர் ஜெயக்குமார் முன்பு நீதானே பாக்சர் வடிவேலை கொலை செய்தாய் என்று கோஷமிட்டனர். ஆனால் அவர்களை ஜெயக்குமார் மற்றும் வார்டன்கள் துரை, அய்யப்பன், யுவராஜ் சமாதானப்படுத்தினர்.
ஆனால் பர்மா சீனு உள்ளிட்ட சிலர் ஜெயக்குமாரை இழுத்துச்சென்று, சிறை அலுவலக அறையில் தள்ளினர். அவரை பர்மா சீனு, அரிசி மூட்டையை தூக்கும் குத்தூசியால் குத்தினார். பின்னர் அந்த அறையில் இருந்த ஆவணங்களில் தீவைத்து, ஜெயக்குமாரை தீயினுள் போட்டனர். அவர் தீயில் கருகி இறந்தார்.
சுமார் 2 ஆயிரம் கைதிகள் இந்த கலவரத்தில் ஈடுபட்டனர். கலவர கும்பலை நோக்கி கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் துப்பாக்கியால் சுட்டார். ஆனால் கலவரம் அடங்கவில்லை. எனவே அதை அடக்குவதற்கு சென்னை நகர போலீசின் உதவி நாடப்பட்டது.
போலீஸ் துணை கமிஷனர் ஜஸ்பர் ராஜாசிங் தலைமையில் போலீசார், சிறைக்குள் வந்தனர். அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜெயபால், மணி, பாபு, காதர் ஆகியோர் மரணமடைந்தனர். கலவரம் அடங்கியது.
இந்த கலவரத்தில் 40 போலீசார், 40 சிறை அலுவலர்கள், 63 கைதிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 96 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். சிலர் தலைமறைவானதை அடுத்து, வழக்கு பிரிக்கப்பட்டது. 49 பேர் மீதான வழக்கு, 4-வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கின் குற்றப்பதிவுக்காக அனைவரும் கோர்ட்டில் ஆஜராகும்படி நீதிபதி எஸ்.ராஜகோபாலன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, சிறை கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்கள்.
அவர்களில் 27 பேர் மீது குற்றச்சாட்டுகளை நீதிபதி பதிவு செய்தார். மற்ற 22 பேர் மீது 14-ந் தேதி குற்றப்பதிவு செய்யப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications