கோவாவில் மனோகர் பரிக்கர் 3-வது முறையாக முதல்வரானார்!
பனாஜி: கோவா மாநில முதல்வராக மனோகர் பரிக்கருக்கு மாநில ஆளுநர் சங்கர நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
காங்கிரஸ் அரசை வீழ்த்திய பாரதீய ஜனதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் நேற்று கூட்டணி அரசாகப் பதவியேற்றது.
முதல்முறையாக, ஆளுநர் மாளிகையை தவிர்த்து விட்டு, திறந்தவெளி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. முதல்வராக மனோகர் பரிக்கரும் அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பாரதிய ஜனதாவைச் சேர்ந்த தயானந்த் மந்த்ரேகர், லட்சுமிகாந்த் பர்சேகர், மடானி சல்டானா, பிரான்சிஸ் டிசவுசா ஆகியோரும், கூட்டணிக் கட்சியான மராட்டியவாத கோமந்தக் கட்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ண தாவலிகரும் புதிய அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்..
இந்நிகழ்ச்சியில், பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத், ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனோகர் பரிக்கர்
56 வயதான மனேகார் பரிக்கர், 1955-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி மபுசா என்ற இடத்தில் பிறந்தார். அவர் 1978-ம் ஆண்டு பட்டம் பெற்றார். மும்பை ஐ.ஐ.டி.யில் மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் படித்தார். ஐ.ஐ.டில். படித்து முதல்வர் ஆன முதல் நபர் இவரே ஆவார். கோவாவில் பா.ஜனதாவின் ஆரம்பகால உறுப்பினர்களில் இவரும் ஒருவர். கடந்த 1994-ம் ஆண்டு, கோவா சட்டசபையில் 4 உறுப்பினர்களே பா.ஜனதாவுக்கு இருந்த நிலையில், ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பா.ஜனதாவை வளர்த்தவர் பரிக்கர் ஆவார்.
கடந்த 2000-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் பிரான்சிஸ்கோ சர்டின்காவுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்று விட்டு, முதல்முறையாக மனோகர் பரிக்கர் முதல்வர் ஆனார். ஆனால் அப்போது, 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பா.ஜனதாவுக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தனர். இதனால் ஆட்சி நடத்துவதில் அவருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து, 2002-ம் ஆண்டு அவர் பேரவையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்தித்தார். அந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு அறுதி பெரும்பான்மைக்கு 4 இடங்கள் குறைவாகவே கிடைத்தன. இருப்பினும், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பரிக்கர் மீண்டும் ஆட்சி அமைத்தார்.2005-ம் ஆண்டு மார்ச் மாதம், அவரது ஆட்சி கவிழ்ந்தது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மனோகர் பரிக்கர் கடந்த 7 ஆண்டுகளில் சிறுபான்மையினருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். காங்கிரஸ் அரசின் சுரங்க ஊழலை அம்பலப்படுத்தி பிரசாரம் செய்தார். இதனால் பா.ஜனதாவின் செல்வாக்கு உயர்ந்து, ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. பரிக்கர் நிறுத்திய 6 கிறிஸ்தவ வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். பரிக்கர், எளிமைக்கும், தூய்மைக்கும் பெயர் பெற்றவர்.












Click it and Unblock the Notifications