சேலம் தொழிலதிபர் துரைசாமி வீட்டில் வருமான வரித்துறை விடியவிடிய சோதனை
சேலம்: சேலம் தாதகாப்பட்டி பொம்மண்ண செட்டிக்காட்டு பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் துரைசாமிக்கு சொந்தமான வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
யார் இந்த துரைசாமி?
சேலம் 5 ரோடு அருகே பிரிமியர் ரோலர் பிளவர்மில் இருந்தது. இதன் பங்குதாரர்கள் ரவிச்சந்திரன், பாலாஜி, வெங்கடாசலம், வேணுகோபால் ஆகியோர் இந்த மில்லை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் சேலம் தாதகாப்பட்டி பொம்மண்ண செட்டிக்காடு பகுதியை சேர்ந்த தொழில்அதிபரும், புத்தககடை அதிபருமான துரைசாமியை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் ஆடிட்டர் துரைசாமி மூலம் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொழில் அதிபர் துரைசாமியிடம் பிளவர் மில் பத்திரம் மற்றும் நிரப்பப்படாத வங்கி செக்குகளை கொடுத்து ரூ.3கோடி கடன் வாங்கினர். இந்நிலையில் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தியும், ரோலர் பிளவர் மில் பத்திரத்தை பங்குதாரர் வசம் திரும்ப ஒப்படைக்கவில்லை.
மாறாக போலி ஆவணங்களை தயாரித்து சேலத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் குடும்பத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக மாநகர குற்றப்பிரிவு போலீசார் துரைசாமி உள்ளிட்ட 13 பேரை குற்றவாளியாக சேர்த்து வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த நிலமோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.
வருமான வரித்துறை சோதனை
இந்நிலையில் புத்தகக் கடை அதிபர் துரைசாமி, ரியல் எஸ்டேட் தொழிலில் முறைகேடாக சொத்து சேர்த்துள்ளதாகவும், வருமான வரி ஏய்ப்பு செய்து வருவதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் சென்னை, மதுரை மற்றும் கோவை வருமான வரித்துறையை சேர்ந்த 50 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சேலம் வந்தனர்.
பின்னர் அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து சேலம் தாதகாப்பட்டி பொம்மண்ண செட்டிக்காடு பகுதியில் உள்ள தொழில் அதிபர் துரைசாமி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதே போல் செவ்வாய்ப்பேட்டை லாங்கிலி சாலையில் அவருக்கு சொந்தமான புக் பைண்டிங் கடையிலும், சோதனை நடந்தது. இது தவிர சேலம் சகாதேவபுரத்தில் உள்ள ஆடிட்டர் துரைசாமி வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதே போல் வெளியே இருப்பவர்கள், வீட்டுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வீடு மற்றும் கடைகளில் இருந்தவர்களின் எவ்வித நடவடிக்கைகளுக்கும் அதிகாரிகள் அனுமதி வழங்காமல் அவர்களை தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
விடிய.. விடிய..
மேலும் சோதனை நடத்தப்பட்ட 3 வீடுகளுக்கும் வெளியே கோவையை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே பிளவர் மில் விவகாரத்தில் கடனாக வாங்கிய பணம் கை மாறியது எப்படிப மோசடி நடந்த விபரம் உள்ளிட்ட தகவல்களை கேட்டறிந்தனர். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
3 இடங்களிலும் விடிய, விடிய சோதனை நடத்தினர். இந்த சோதனை இன்று காலை 8 மணி வரை நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. மேலும் 2 இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆனாலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக வந்த தகவலின் பேரிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரியவருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையால் பிளவர் மில் மோசடியில் தொடர்புடையவர்களும் பீதியில் உள்ளனர். அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications