பாதல், அகிலேஷ் பதவியேற்பு விழாவுக்கு செல்லும் மமதா: கடுப்பில் காங்கிரஸ்

சிரோமணி அகாலிதளத் தலைவர் பர்காஷ் சிங் பாதல் வரும் 14ம் தேதி பஞ்சாப் முதல்வராக பதவியேற்கிறார். மறுநாள் அதாவது 15ம் தேதி சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்கிறார். இந்நிலையில் தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பாதல் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை அழைத்துள்ளார். அதே போன்று தனது மகனின் பதவியேற்பு விழாவிற்கு வருமாறு முலாயமும் மமதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். அவர்கள் இருவரின் அழைப்பையும் ஏற்று பதவியேற்பு விழாக்களுக்கு செல்கிறார் மமதா.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு மமதா பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாதலின் விழாவுக்கும், தங்களை படுதோல்வியடையச் செய்த அகிலேஷின் பதவியேற்பு விழாவுக்கும் செல்கிறார். இதனால் காங்கிரஸ் மமதா மீது கடுப்பாக உள்ளது. மூன்றாவது அணி அமைக்கும் திட்டத்தில் மமதா இவ்வாறு செயல்படுகிறார் என்று கூறப்படுகின்றது.
சில்லறை வர்த்தக்த்தில் அன்னிய முதலீடு, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது, லோக் ஆயுக்தா மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகிய விவகாரங்களில் மமதா மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். மேலும் கிழக்குப் பகுதியை மேம்படுத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் அவர் கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications