மாவோயிஸ்டுகள் உதவியுடன் சுரங்கத் தொழிலில் தாவூத் இப்ராகிம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பல ஆயிரம் ரூபாய் கோடி மதிப்பிலான கனிமவளங்களை குறிவைத்து மாவோயிஸ்டுகளுடன் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கை கோர்த்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் இருந்து கனிம வளங்களை வெட்டியெடுப்பதற்கான அனுமதி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ரூ4 ஆயிரம் கோடியை முதல் கட்டமாக தாவூத் இறக்கிவிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்டவிரோத தொழில்கள் மூலமான தாவூத்தின் சொத்து மதிப்பு ரூ12 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கும் என்று பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
தற்போது பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை அள்ளித்தரும் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் தாவூத், மாவோயிஸ்டுகள் உதவியுடன் இறங்கியிருப்பதாக நாடு முழுவதும் மாநில காவல்துறையினருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதனிடையே அண்மைக்காலமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில் மூலமாக ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் பெற்று வருவது தெரியவந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்ட போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் பெருமளவிலான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.
மேலும் இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமியும் தாவூத்தின் தொழில்சார் நடவடிக்கைகளுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது. மாவோயிஸ்டுகளுக்கான அதிநவீன ஆயுதங்களை தாவூத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் உதவி வருவதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications