தனக்கு முதலில் மட்டன் பரிமாறச் சொன்ன மகனை சுட்டுக் கொன்ற மாஜி ராணுவ வீரர்
பாட்னா: பீகார் மாநிலத்தில் தனக்கு தான் முதலில் ஆட்டுக்கறி பரிமாற வேண்டும் என்று அடம்பிடித்த 20 வயது மகனை கோபத்தில் தந்தை சுட்டுக் கொன்று விட்டார். மகனைக் கொன்று விட்டு தப்பி ஓடி விட்ட அவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது நவாதிஹ் என்ற கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண தாகூர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது மனைவி லீலாவதி தேவி. அவர்கள் வீட்டில் ஆட்டுக் கறி சமைத்துள்ளனர். குடும்பத்தார் அனைவரும் கறியை ருசிக்க ஆவலாய் அமர்ந்திருக்கின்றனர். ராதாகிருஷ்ணன் ஆட்டுக்கறி தட்டுடன் அனைவருக்கும் பரிமாற வந்துள்ளார்.
அப்போது அவரது இளைய மகன் சத்ருகன் தாகூ ர்(20) அண்ணனை விட்டுவிட்டு தனக்கு தான் முதலில் கறி கொடுக்க வேண்டும் என்று கூறி அந்த தட்டைப் பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை தனது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மேலும் தடயங்களை அழிக்க இறந்த மகனின் உடலை அவசர அவசரமாக சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தீ வைத்தார்.
ஆனால் இது குறித்து ராதாகிருஷ்ணனின் மனைவி லீலாவதி தேவி போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பாதி எரிந்த நிலையில் இருந்த சத்ருகனின் உடலை கைப்பற்றினர். இதற்கிடையே ராதாகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார். அவர் தனது மகனை சுட்டுக் கொன்றபோது குடிபோதையில் இருந்தாராம்.
சாதாரண கறிக்காக, பெற்ற மகனை சுட்டுக் கொன்று விட்டு தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications