அகிலேஷ்-பாதல் பதவியேற்புக்கு போக வேண்டாம்.. மம்தாவிடம் கெஞ்சிய பிரதமர்!

இதையடுத்து இந்த விழாக்களுக்குச் செல்வதை மம்தா பானர்ஜி ரத்து செய்துவிட்டார். அதே நேரத்தில் தனது கட்சியின் சார்பில் மாநில அமைச்சரையும் எம்பியையும் மம்தா இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்தாலும் பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை மம்தா எதிர்த்து வருகிறார்.
சில்லறை வர்த்தக்த்தில் அன்னிய முதலீடு, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது, லோக் ஆயுக்தா மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகிய விவகாரங்களில் மமதா மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்த விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளுடன் கைகோர்த்து காங்கிரஸ் கட்சியை குலை நடுங்க வைத்தார்.
இந் நிலையில் மத்தியில் காங்கிரஸ்- பாஜகவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்கவும், பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், மம்தா பானர்ஜி ஆகியோரை கைகோர்க்க வைக்கவும் மூத்த அரசியல் தலைவரான அருண் நேரு முயற்சித்து வருகிறார். இவர்கள் பல விவகாரங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும் உத்தரப் பிரதேச தேர்தல் தோல்வியையடுத்து மத்தியில் விரைவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழும் இடைத் தேர்தல் வரும் என்றும் மம்தா கட்சியின் மத்திய ரயில்வே அமைச்சரான திரிவேதி கூறி வருகிறார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் மத்தியில் அரசை நடத்த முடியாது என்ற நிலையில் உள்ள காங்கிரஸ் அரசு, மம்தாவின் இந்த செயல்களால் அதிர்ந்து போயுள்ளது.
இந் நிலையில், சிரோமணி அகாலிதளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் வரும் 14ம் தேதி பஞ்சாப் முதல்வராக பதவியேற்கிறார். மறுநாள் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்கிறார்.
இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு பாதல், மமதா பானர்ஜியை அழைத்துள்ளார். அதே போல தனது மகனின் பதவியேற்பு விழாவிற்கு வருமாறு முலாயமும் மமதாவை அழைத்துள்ளார். அவர்கள் இருவரின் அழைப்பையும் ஏற்று பதவியேற்பு விழாக்களுக்கு செல்ல மம்தா முடிவு செய்திருந்தார்.
காங்கிரசுக்கு எதிரான அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்கும் விழாவிலும், சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வரும் விழாவிலும் தங்களது கூட்டணியில் உள்ள மம்தா கலந்து கொண்டால், அது தங்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை உருவாக்கும் என்றும், சமாஜ்வாடி, அகாலிதளம் ஆகியோருடன் மம்தா கைகோர்க்க இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் காங்கிரஸ் அச்சத்தில் உள்ளது.
இதையடுத்து மம்தா பானர்ஜியை இந்த விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என்று கோர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்தார். இந்த வேலை பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் தரப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று முழுவதும் மம்தா பானர்ஜியுடன் பிரதமர் பலமுறை தொலைபேசியில் பேசினார். இந்த விழாக்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார் (கெஞ்சினார்).
அப்போது மேற்கு வங்கத்துக்கு நான் கோரிய சிறப்பு நிதியுதவித் திட்டம் என்னாச்சு என்று பிரதமரிடம் மம்தா கேட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து பிரணாப் முகர்ஜியும் மம்தா பானர்ஜியிடம் தொலைபேசியில் கெஞ்சினார். மேலும் மம்தா கோரும் மத்திய அரசின் சிறப்பு நிதியுதவி குறித்து பிரதமரே நேரடியாக உங்களுடன் விரைவில் ஆலோசனை நடத்துவார் என்றும் பிரணாப் முகர்ஜி உறுதியளித்தார். மேலும் இது குறித்து அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனையை உடனே தொடங்கவும் முகர்ஜி முன் வந்தார்.
இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜியின் செயலாளர் டெல்லிக்கு வந்து, பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் நிதியுதவித் திட்டம் குறித்த ஆலோசனைகளைத் தொடங்கினார்.
இதையடுத்து பாதல், அகிலேஷ் பதவியேற்பு விழாக்களுக்குச் செல்வதை ரத்து செய்வதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் எம்.கே.நாராயணனின் உரையுடன் 15ம் தேதி தொடங்கவுள்ளதால், தன்னால் பதவியேற்பு விழாக்களுக்குச் செல்ல முடியவில்லை என்றும், தனக்குப் பதிலாக மேற்கு வங்க சுற்றுலாத்துறை அமைச்சர் ரச்பால் சிங், சண்டீகர் சென்று பாதல் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்றும், எம்.பி. சுல்தான் அகமத், லக்னெள சென்று அகிலேஷ் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்றும் அறிவித்துள்ளார்.
காங்கிரசுக்கு வந்த நிலையைப் பாருங்கள்!












Click it and Unblock the Notifications