கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்: கருணாநிதி

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கூடங்குளம் அணுமின் நிலையம் மூடிக் கிடப்பதைப் பற்றியும், அந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வராமல் தமிழக அரசு மவுனம் காப்பதன் ரகசியம் பற்றியும் கேள்விகள் எழுப்பினேன். இதற்கு அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. மாறாக முதல்வர் ஜெயலலிதா கூடங்குளம் போராட்டக் குழுவினரை அழைத்துப் பேசுகிறார். அதே நேரத்தில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையையும் வாங்கி வைத்துள்ளார். அதைப் பற்றி வாய் திறக்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால் கடந்த ஆறு மாதங்களாக தினமும் ரூ.5 கோடி நஷ்டம் ஏற்படுகிறது என்று இந்திய அணுமின் கழக இயக்குனர் பரத்வாஜ் கூறியுள்ளார். அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால் கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் மேலும் 6 மாதங்களுக்கு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணுமின் நிலையம் செயல்பட தமிழக அரசிடமிருந்து அனுமதி கிடைப்பதற்கு காலதாமதமாகிறது.
2011-ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அதிமுக அளித்த தேர்தல் அறிக்கையில் "இருண்ட தமிழகம் ஒளி மயமாக்கப்படும். மின் விநியோகம் சீராக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கூடங்குளம் அணு மின்நிலையத்தினை திறப்பதற்கு வழி செய்யும் வகையில் தகுந்த முடிவை அரசு எடுக்கவில்லை. அதற்கு மாறாக பழியை மத்திய அரசின் மீது போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எதற்கெடுத்தாலும் பிரதமருக்குக் கடிதம் எழுதிவிட்டுத் தப்பிக்க நினைக்கும் மாய்மாலத்தை தமிழ்நாட்டு மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இனியும் தாமதிக்காமல் மத்திய மாநில அரசுகள் உடனடியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications