ஜனாதிபதி உரையில் இலங்கையை சற்றும் எச்சரிக்காதது ஏமாற்றமளிக்கிறது: கனிமொழி-திருமா

இதுகுறித்து திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கூறுகையில்,
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு நாடாளுமன்றம் வாயிலாக இந்தியா எதாவது ஒரு செய்தியை இலங்கை அரசுக்கு தெரிவிக்கும் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால், ஒரு வார்த்தைக் கூட குடியரசுத் தலைவரின் உரையில் இடம்பெறவில்லை.
பெயர் அளவில், இலங்கையில் போரினால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றும் பணிகளும் மறுவாழ்வுத் திட்டங்களையும் நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கக் கூடிய உரையாக அமைந்து விட்டது என்றார் அவர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில்,
குடியரசுத் தலைவரின் ஒரு மணி நேர உரையில், ஒரு வரி மட்டுமே ஈழத் தமிழர்கள் நிலைமை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு இந்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது இந்தியாவின் நிலையை உலக நாடுகள் அனைத்தும் பரபரப்புடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றன. அரசின் தரப்பில் வெளிப்படையான நிலை தெரிவிக்கப்படவில்லை.
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படையினரால் பல்வேறுத் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். மீன்பிடிக்கும் உரிமையை இழந்து படுகொலை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அவர்களை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குடியரசுத் தலைவரின் உரையில் இடம் பெறவில்லை என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications