கட்டண உயர்வுக்கு மம்தா கடும் எதிர்ப்பு: ராஜினாமா செய்கிறார் ரயில்வே அமைச்சர் திரிவேதி?

கட்டண உயர்வு குறித்து கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் மூத்த எம்பியும் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சருமான சுதீப் பந்தோபாத்யாயா, பயணிகள் கட்டண உயர்வை திரும்பப் பெற தினேஷ் திரிவேதியை வலியுறுத்தியுள்ளோம். ஏழைகளின் நலனை எப்போதுமே பேணிக் காக்க வேண்டும் என்று தான் மம்தா எங்களுக்குக் கற்றுத் தந்துள்ள பாடம். அதை மீற முடியாது. பட்ஜெட் குறித்து திரிவேதியுடன் எங்களது கட்சியில் யாரும் ஆலோசிக்கவில்லை. இதனால் கட்டண உயர்வு அதிர்ச்சி தருகிறது என்றார்.
கட்சியின் இன்னொரு மூத்த எம்பியான டெரிக் ஓ பிரையன் தனது டிவிட்டரில், பட்ஜெட் என்றாலே விலையை உயர்த்துவது என்று தான் பொருளா.. இதை ஏற்கவே முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் தினேஷ் திரிவேதியை சந்தித்து ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று நேரிலும் வலியுறுத்தினர்.
இது குறித்து தினேஷ் திரிவேதி கூறுகையில், கட்டண உயர்த்தப்படுவது குறித்து எனது கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்குத் தெரியாது. அவர் என் வேலையில் தலையிடுவதே இல்லை. இந்த பட்ஜெட்டுக்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்.
ரயில்வேயின் நிதிநிலைமை மிக மிக மோசமாக உள்ளது. கிட்டத்தட்ட ஐசியூவில் தான் உள்ளது ரயில்வே. அதை மீட்கவே சிறிய அளவில் கட்டணத்தை உயர்த்தினேன். இந்தக் கட்டண உயர்வால் கூட பெரிய அளவில் ரயில்வேவுக்கு நிதி கிடைக்கப் போவதில்லை. கடந்த 8 ஆண்டுகளில் உயர்ந்த டீசல் விலையோடு ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை.
ரயில்களின் பாதுகாப்புக்கு, சிக்னல்கள் கட்டமைப்பை மேம்படுத்த நிறைய பணம் தேவை. அதற்கு கட்டண உயர்வு அவசியம் என்றார்.
நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா உத்தரவிடுவாரா என்று கேட்டதற்கு, நான் என் கடமையைத் தான் செய்துள்ளேன். என மனசாட்சியைத் தவிர கடவுளுக்குக் கூட பயப்பட மாட்டேன். பயணிகள் பாதுகாப்பை அடகு வைத்து கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டுமானால் அதை நான் செய்ய மாட்டேன் என்றார்.
இந் நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெற வேண்டும் என திரிவேதிக்கு மம்தா உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது
இல்லாவிட்டால் அவரை பதவி விலகுமாறு கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து அவர் விரைவில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வரானதையடுத்து திரிவேதியை ரயில்வே அமைச்சராக்கினார். இது தான் திரிவேதி தாக்கல் செய்த முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே அவரது கடைசி பட்ஜெட்டாகவும் மாறப் போகிறது.












Click it and Unblock the Notifications