தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்-காங். எம்.பிக்களிடம் பிரதமர் பேச்சு

நாடாளுமன்றத்தில் நேற்று இரு அவைகளிலும் நேற்று காங்கிரஸ் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் அனைவரும் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்யசபா ஸ்தம்பித்தது. லோக்சபாவிலும் அவை நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை, ஞானதேசிகன் எம்.பி தலைமையில் தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். இந்தக் குழுவில் காங்கிரஸ் எம்.பிக்கள், சுதர்சன நாச்சியப்பன், எம். கிருஷ்ணசாமி, கே.எஸ். அழகிரி, பி. விஸ்வநாதன், எஸ்.எஸ். ராமசுப்பு, மாணிக் தாகூர், என்.எஸ்.வி. சித்தன் ஆகிய எம்.பிக்கள் கையெழுத்திட்டு ஒருமனுவை பிரதமரிடம் கொடுத்தனர்.
அதில், இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த நிலையில், போரின் போது அப்பாவி மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் இழைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆய்வு செய்த பல சர்வதேச, உள்நாட்டு பார்வையாளர்கள் அனைவரும் போர்க் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு சரியான செயல் திட்டத்தை வகுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளன. இதனைக் குறிப்பிட்டுத்தான் அமெரிக்காவும் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
இலங்கை அரசு அமைத்த குழு அளித்த பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ராஜ்ஜிய ரீதியாக இந்த விவகாரத்தை அணுக வேண்டும். ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனா உடன்படிக்கையின்படி, இலங்கை தமிழர்களுக்கு அரசியல் உரிமையை பெற்றுத்தரும் நடவடிக்கையில் மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
இலங்கையில் வடகிழக்கு, வடக்கு மாகாணங்களில் வசிக்கும் ஆதரவற்ற இலங்கை தமிழ் மக்களின் நலன்களில் உண்மையான அக்கறை உள்ள நாடு இந்தியா மட்டுமே என்ற உணர்வுடன் இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்று காங்கிரஸார் கூறியிருந்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட பிரதமர், இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு மிகுந்த அக்கறையும் கவலையும் கொண்டிருப்பதாகக் கூறினாராம். மேலும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளித்தார் என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications