விழுப்புரம்- திண்டுக்கல் இரட்டைப் பாதைத் திட்டம் என்ன ஆச்சோ?!
சென்னை: தென் இந்தியாவின் முதலாவது ரயில் நிலையம் என்ற பெருமைக்குரிய ராயபுரம் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக்குவதற்கு உரிய ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் மிக முக்கியமான விழுப்புரம்- திண்டுக்கல் இரட்டைப் பாதைத் திட்டம் பற்றி ரயில்வே நிதிநிலை அறிக்கையில் எதுவுமே சொல்லப்படவில்லை.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே நிதிநிலை அறிக்கையின்படி 13 புதிய ரயில் தடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில், தமிழத்துக்கு ஒன்று கூட இல்லை. நாடு முழுவதும் 83 ரயில் நிலையங்கள், ஆதர்ஷ் நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழகத்தில் அரியலூர், கோவை, ராயபுரம், திருவெறும்பூர் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள் ஆதர்ஷ் ரயில் நிலையங்களாக ஆக்கப்பட்டு உள்ளன.
விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டைப் பாதை திட்டம் எந்த தேதியில் நிறைவடையும் என்பது குறித்து எந்த தகவலும் கூறப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த திட்டம் பலமுறை வலியுறுத்தப்பட்டும், எந்த முக்கியத்துவத்தையும் மத்திய அரசு அளிக்கவில்லை.
அதே நேரத்தில் மதுரை - திருநெல்வேலி - கன்னியாகுமரி இடையில் மின்மயமாக்கப்பட்ட இரட்டைப் பாதை அமைக்கப்படுவதற்கான ஆய்வு ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு இத்திட்டம் மிகப்பெரிய பலன் அளிக்கும்.
இதேபோல் கோவை - மேட்டுப்பாளையம், ஈரோடு - கரூர் - திருச்சி, கரூர் - திண்டுக்கல், நாகை - வேளாங்கண்ணி, காரைக்கால் துறைமுகம் - திருவாரூர் - தஞ்சாவூர் - திருச்சி ஆகியவற்றையும் மின்மயமாக்க ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மாநில அரசுகளின் நிதியுதவியுடன் மொத்தம் 31 ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், தமிழகம் இடம் பெறவில்லை.
ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் வழியாக ஆவடிக்கும் - கூடுவாஞ்சேரிக்கும் இடையில், புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம், மத்திய திட்டக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, அங்கு பரிசீலனையில் உள்ளது. மேலும் சென்னையில் கூடுதலாக 18 புறநகர் ரயில்கள் சேவைகள் அளிக்கப்படவுள்ளன. ராயபுரம் ரயில் நிலையத்தை 4வது முனையமாக்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை பறக்கும் ரயில் திட்டம் வேளச்சேரி-பரங்கிமலை இடையில், 2013ல் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, "பெரம்பூரில் இரண்டாவது ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்' என அறிவித்திருந்தார். ஆனால், அது பற்றிய எந்த ஒரு அடுத்த கட்ட தகவலும் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை.












Click it and Unblock the Notifications