இந்திய பாதுகாப்புத் துறைக்கான நிதிஒதுக்கீடு சீனாவைவிட மிகக் குறைவு
டெல்லி: பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக 17 சதவீதம் நிதி ஒதுக்கியுள்ளபோதும் சீனா, பாகிஸ்தான் நாடுகளை ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகவே கருதப்படுகிறது.
நடப்பு ஆண்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ1 லட்சத்து 93 ஆயிரத்து 408 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 17 விழுக்காடு அதிகமாகும்.
ஆனால் 2012-13-ம் ஆண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது வெறும் 1.9 சதவீதமாக மட்டுமே இருக்கக் கூடும். பாதுகாப்புத் துறை வல்லுநர்களும் ராணுவத்தினரும் கோரி வரும் 3 விழுக்காட்டைவிட இது மிகக் குறைவானதே.
சீனாவைப் பொறுத்தவரையில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு பாதுகாப்புத்துறைக்கு நிதி ஒதுக்கியநிலையில் இந்தியாவோ வெறும் 39 பில்லியன் டாலரை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.
இதனிடையே கடந்த ஆண்டு ஆயுத தளவாட கொள்முதலுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் செலவிடப்படாத ரூ3 ஆயிரத்து 55 கோடியை திரும்ப ஒப்படைக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது. இத்தொகையையும் கூட தேவைப்படும் நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் தற்போதும் செலவிட்டுக் கொள்ள நிதி அமைச்சகம் அனுமதித்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
முப்படைகளிலும் தற்போதைய கையிருப்பு ஆயுதங்களை முற்று முழுதாக நவீனப்படுத்தும் வகையில் பலவகையான நவீன ரக ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருக்கின்றன. விமானப்படைக்கு ரூ20 பில்லியன் மதிப்பிலான 126 புதிய விமானங்கள் இதில் அடக்கம்.












Click it and Unblock the Notifications