9 நாள் நீதிமன்றக் காவலில் ஒசாமா மனைவிகள், குழந்தைகள்: பாக். நீதிமன்றம் உத்தரவு
இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் 3 மனைவிகள், 8 குழந்தைகள் உள்பட அவரது குடும்பத்தினர் 14 பேரை 9 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் அப்போத்தாபாத் வீட்டில் வைத்து அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு அவரது 3 மனைவிகள், 8 குழந்தைகள் உள்பட 14 பேரை பாகிஸ்தான் போலீசார் இஸ்லாமாபாத் அழைத்துச் சென்று அங்கு ஒரு வீட்டில் சிறை வைத்தனர். அந்த வீட்டையே கிளை சிறையாக மாற்றினர்.
சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஒசாமா குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
ஒசாமாவின் இளைய மனைவி அமல் அப்துல் பத்தாஹ் ஏமனைச் சேர்ந்தவர். அவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. அவருக்காக வாதாட முகமது ஆமீர் என்ற வழக்கறிஞரை ஏற்பாடு செய்துள்ளார் அவரது சகோதரர் ஜகரியா அகமத் அப்துல் பத்தாஹ்.
இந்நிலையில் வழக்கு விசாரணை நடைபெறவிருக்கும் அந்த வீட்டிற்கு சிவில் நீதிபதி ஷாருக் அர்ஜுமன் சென்று பார்வையிட்டார். ஒசாமா பின் லேடன் பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு அருகில் உள்ள அப்போத்தாபாத் வீட்டில் 5 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications