மாலத்தீவில் போலீசுக்கும், நஷீத் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்: 22 பேர் காயம்
மாலே: மாலத்தீவு நாடாளுமன்றமான மக்கள் மஜ்லிஸ் திறக்கப்படுவதை தடுக்க முயன்ற முன்னாள் அதிபர் முகமது நஷீதின் ஆதரவாளர்களுக்கும், போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீதின் மாலத்தீவு ஜனநாயக் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் தலைநகர் மாலேயில் உள்ள நாடாளுமன்றத்தில் கூடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுபப்பினர். நாடாளுமன்றத்தை திறக்க விடாமல் ரகளை செய்தனர். தடுக்க முயன்ற போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசி போராட்டக்காரர்களை கலைந்துபோகச் செய்தனர். இதில் 4 போலீசார் மற்றும் 18 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.
போராட்டக்காரர்கள் அரசு மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்தினர். அவர்கள் கற்கள் மற்றும் உடைந்த கண்ணாடிகள் ஆகியவற்றை எரிந்தனர். அதனால் போலீசார் அவர்களை கட்டாயப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர் என்று போலீசாரின் செய்தித் தொடர்பாளர் அகமது ஷியாம் தெரிவித்தார்.
இதே போன்று மக்கள் மஜ்லிஸ் கடந்த 1ம் தேதி கூடுவதாக இருந்தபோதும் நஷீத்தின் ஆதரவாளர்கள் அதிபர் வகீத் அமரும் நாற்காலியையும், அமைச்சர்களின் நாற்காலிகளையும் அகற்றிவிட்டு புதிய அதிபர் உடனே பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
இதனால் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவது தாமதமானது. நாடாளுமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினரை நோக்கி நஷீத்தின் ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். தற்போதைய அரசு ஆதரவாளர்களின் கடைகளையும் சூறையாடினர். நாடாளுமன்றத்தின் தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகளை முற்றாகத் துண்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு அதிபராக இருந்த நஷீத், துப்பாக்கி முனையில் கடந்த மாதம் 7ம் தேதி பதவியிலிருந்து இறக்கப்ப்ட்டார். இந்தியா, அமெரிக்க நாடுகளின் ஆலோசனைப்படி அங்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ள அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications