கையால் ஊட்டிவிட்டதற்காக குழந்தைகளைப் பிரிந்த பெற்றோர் விவாகரத்து
டெல்லி: கையால் உணவு ஊட்டியதற்காக நார்வே அதிகாரிகளால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள். தனது மனைவிக்கு மனநல பாதிப்பு உள்ளதாக அந்த குழந்தைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அனுருப் பட்டாச்சார்யா. அவரது மனைவி சகாரிகா பட்டாச்சாரியா. அவர்களுக்கு அபிக்யான்(3) என்ற மகனும், ஐஸ்வர்யா(1) என்ற மகளும் உள்ளனர். அனுருப் தனது குடும்பத்துடன் நார்வேயில் வசித்து வந்தார். அப்போது அவர்கள் குழந்தைகளுக்கு கையால் உணவு ஊட்டியதைப் பார்த்த அந்நாட்டு குழந்தைகள் நலத் துறை அதிகாரிகள் குழந்தைகளை தூக்கிச் சென்றனர். இந்த சம்பவம் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் நடந்தது.
இதையடுத்து அனுருப் தம்பதியினர் இந்திய அரசின் உதவியை நாடினர். அதையடுத்து இந்திய அரசு நார்வே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் குழந்தைகளை அவர்களின் மாமாவிடம் ஒப்படைக்க அதிகாரிகள் சம்மதித்தனர். இதையடுத்து குழந்தைகளை அழைத்து வர இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் 2 பேர் நார்வே சென்றுள்ளனர். வரும் 23ம் தேதி அவர்கள் அந்நாட்டு குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர். அதையடுத்து குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே குழந்தைகளின் பெற்றோர் சட்டப்படி பிரியவிருக்கிறார்கள். இது குறித்து அனுருப் கூறுகையில்,
எனது மனைவி சகாரிகா நேற்றிரவு என்னை கண்மூடித் தனமாக தாக்கினார். முகத்தில் நகங்களால் கீறினார். இது நடப்பது முதன் முறையன்று. அவர் ஏற்கனவே பலமுறை என்னை தாக்கியுள்ளார். ஆனால் இம்முறை என்னை படுகாயமடைய வைத்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது நான் அவரைத் தாக்கியதாக பொய் சொன்னார்.
எங்கள் குழந்தைகளை திரும்பப் பெறும்வரை இதை வெளியே சொல்லக் கூடாது என்றிருந்தேன். ஆனால் முடியவில்லை. இதை நான் முதலிலேயே கூறியிருக்க வேண்டும். எனது மனைவிக்கு மனோவியாதி உள்ளது. அவர் இரண்டு குழந்தைகள் பெற்றும் இன்னும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளார். இனியும் அவருடன் வாழ முடியாது என்பதால் நான் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன். நான் சட்டப்படி அவரை விவாகரத்து செய்யப் போகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications