ஊருக்குள் பவனி வரும் கரடி: மக்கள் பீதி
களக்காடு: களக்காட்டில் காட்டுக்குள் செல்ல மறுத்து ஊருக்குள் சுற்றித் திரியும் கரடியால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
களக்காடு கக்கன் நகர், நாடார் புதுத்தெரு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கரடி சுற்றித் திரிகிறது. இரவு 11 மணிக்கு பின்னர் ஊருக்குள் வரும் கரடி அதிகாலை 4 மணி வரை சுற்றித் திரிவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அங்குள்ள மூனாற்று பிரிவு ஆற்றின் கரையோரமாக கரடி நடமாடியுள்ளது. அங்கு வனத்துறையினர் சோதனை நடத்தியபோது அதன் கால் தடங்களை கண்டுள்ளனர். அவர்கள் கரடியை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் அது காட்டுக்குள் செல்லாமல் அங்கேயே சுற்றி சுற்றி வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு மூனாற்று பிரிவில் உள்ள மாசானசாமி கோயில் அருகில் இருந்து கக்கன் நகரை நோக்கி கரடி வந்துள்ளது. இதை கண்ட பெண்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் கரடியும் மிரண்டு ஓடியுள்ளது.
மூனாற்று பிரிவு பகுதியில் புதர்கள் உள்ளன. கரடி இந்த புதர்களில் பகல் நேரங்களில் பதுங்கியிருந்துவிட்டு இரவு நேரங்களில் ஊருக்குள் வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications