ரயில்வே அமைச்சர் பதவியேற்பு: திமுக புறக்கணிப்பு.. ஏன்? ஏன்?
டெல்லி: புதிய ரயில்வே அமைச்சராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முகுல் ராய் பதவியேற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியான திமுக பங்கேற்கவில்லை.
ரயில் கட்டண உயர்வை காரணம் காட்டி தனது கட்சியின் சார்பில் ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதியை உடனடியாக நீக்கினார் அக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி. இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் உடனடியாக ஒப்புக் கொண்டனர்.
அதே வேகத்தில் தனது கட்சியைச் சேர்ந்த முகுல் ராயை ரயில்வே அமைச்சராக்க வேண்டும் என்ற மம்தாவின் கோரிக்கையையும் மின்னல் வேகத்தில் ஏற்றுக் கொண்டு, நேற்றே பதவியேற்பு விழாவையும் நடத்தினர் சோனியாவும் மன்மோகனும்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த அவரது பதவியேற்பு விழாவிலும் பிரதமருடன் சோனியாவும் கலந்து கொண்டார். அதே போல மத்திய காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் பிரிதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ஆனால், திமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. காரணம் என்னவாம்?..
திமுக சார்பில் மத்திய கேபினட் அமைச்சர்களாக இருந்த ராசா, தயாநிதி மாறன் ஆகியோரின் தலைகள் 2ஜி விவகாரத்தில் உருண்ட பிறகு, அந்தப் பதவிகள் இன்னும் காலியாகவே உள்ளன. அந்த இடங்களை நிரப்ப சோனியாவும் மன்மோகன் சிங்கும் எந்த ஆர்வமும் காட்டவில்லை.
இது தொடர்பாக திமுக சார்பில் சில முறை பேசியும் கண்டு கொள்ளப்படவில்லை. மேலும் அழுத்திக் கேட்டால் 2ஜி கேஸை மேலும் பலமாக்கிவிடுவார்கள் என்பதால் திமுகவும் அமைதியாக இருப்பது போல காட்டிக் கொண்டுள்ளது.
இந் நிலையில் வாலு போயி கத்தி வந்தது மாதிரி படுவேகத்தில் தினேஷ் போய் முகுல் ராய் வந்துவிட்டார். எல்லாம் சில நாட்களில் நடந்து முடிந்துவிட்டது. காரணம், மம்தா மீதான மன்மோகன் சிங்கின் பயம்.
ஆனால், திமுக என்பது இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ள ஒரு கட்சி என்பதால், அதற்குத் தரும் மரியாதையைக் கூட காங்கிரஸ் வெகுவாகவே குறைத்துக் கொண்டுவிட்டது. இல்லாவிட்டால் மத்திய அமைச்சர்கள் விஷயத்தில் திமுகவை இவ்வளவு தூரம் வெறுப்பேற்றியிருக்க மாட்டார்கள்.
இந் நிலையில் தான் முகுல் ராய் பதவியேற்பு விழாவில் திமுக பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது.
நேற்று அவர் பதவியேற்றதும் மக்களவைக்கு வந்தார். இவர் தான் நமது புதிய ரயில்வே அமைச்சர் என்று அவரை பிரதமர் அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில் பேசிய திமுக எம்பிக்கள், ரயில் கட்டண உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அடடே..!
முகுல் ராய் மூலம் கட்டணத்தை மம்தா எப்படியும் குறைப்பார் என்பது பல்பம் வாங்கும் குழந்தைக்குக் கூட தெரியும். இந் நிலையில் தான் ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்கிறது திமுக.
முகுல் ராய் பற்றி ஒரு கொசுரு:
இதுவரை இவர் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக இருந்தார். இந்தத் துறையில் இவரது 'பாஸ்' ஆக இருந்தது நமது ஜி.கே.வாசன்ஜி!