ஐ.நா. தீர்மானம்: மன்மோகன் அறிவிப்பால் ராஜபக்சே நினைப்பில் மண்
சென்னை: ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததைத்தொடர்ந்து பல நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடக்கிறது. இதில் இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா வரைவு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. வரும் 23 அல்லது 24ம் தேதியில் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கிறது. இந்த தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை பல்வேறு முயற்சி செய்து வருகிறது.
அதில் ஒன்றாக தனது பிரதிநிதிகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த நாடுகளும் இலங்கையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டன. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இதையடுத்து இந்தியா என்ன செய்கிறது என்று பார்த்துவிட்டு நாம் தீர்மானிக்கலாம் என்றிருந்த நாடுகள் இலங்கைக்கு எதிராகத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் வற்புறுத்தலால் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியும் அமெரிக்காவின் தீர்மானத்தை தோற்கடித்துவிடலாம் என்று நினைத்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்த திருப்பம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் 46 நாடுகள் வாக்களிக்கலாம். அதில் 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரிப்பதாக ஏற்கனவே அறிவித்துவி்ட்டன. இந்நிலையில் இந்தியாவும் ஆதரவளித்துள்ளதால் அந்த எண்ணிக்கை 23 ஆகி சமநிலையில் உள்ளது. மேலும் பல நாடுகளும் தீர்மானத்தை அதரிக்கும் என்று தெரிகிறது. இதனால் இலங்ககைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது.