குடிமகன்களின் கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்!

ஆண் பெண் என்ற பேதமின்றி ஜில் பீரை குழுவாகக் குடிக்கும் காட்சிகள் இப்போது அதிகரித்து வருகின்றன.
கோடை வெயில் வேறு வறுத்தெடுக்கிறது. மார்ச் தொடங்கி ஜூலை வரை தமிழகத்தில் இரண்டு மடங்கு பீர் விற்பனையாவது வழக்கம். இந்த முறை மூன்று மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தளவு இளைஞர்களின் தேசிய பானமாகிவிட்ட ஜில் பீர், இன்றைய நிலவரப்படி டாஸ்மாக் கடைகளில் கிடைப்பதில்லை. பிளாக்கில் கூட கிடைப்பதில்லையாம். எந்த விலைக்கும் வாங்க தயாராக இருந்தும் லோக்கலில் பீர் இல்லாததால், புதுச்சேரிக்குப் படையெடுத்துப் போய் போலீசுக்கு பயந்து பயந்து பெட்டி பெட்டியாக பீர்களை கடத்தி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இளைஞர்கள்.
இதையெல்லாம் மனதில் கொண்டு, பீர் சப்ளையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசின் டாஸ்மாக். ஆனால் தேவைக்கேற்ப பீர் உற்பத்தி தமிழகத்தில் இல்லை. எல்லா மதுபான தயாரிப்பு நிறுவனங்களும் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்கின்றன.
எனவே பீர் பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து பீர் வரவழைக்க டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களில் இருந்து பீர் கொள்முதல் செய்ய முடிவு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு தேவையான பீர் பெட்டிகள் எவ்வளவு என்பதை கணக்கீட்டு டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.
ஏப்ரல் முதல் வெளி மாநில பீர் வகைகள் தமிழகத்திற்கு வருகின்றன. எனவே இதற்கு முன் எப்படியோ, இந்த ஆண்டு பீர் தட்டுப்பாடே இருக்காது என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications