பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம்: உதயகுமார் மனைவி மீரா புகார்
நாகர்கோவில்: தமது மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதலில் போலீசாருக்குத் தொடர்பு இருப்பதாக கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் மனைவி மீரா புகார் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார். இவர் நாகர்கோவில் பழவிளை பகுதியில் சாக்கர் மெட்ரிக் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதன் முதல்வராக உதயகுமாரின் மனைவி மீரா உள்ளார். இவர்களின் பள்ளி மதில் சுவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கும்பல் இடித்தது. இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலையிலும் இவர்களின் பள்ளி சுவர் இடிக்கப்பட்டதோடு வகுப்பறைகளும் சூறையாடப்பட்டன. பள்ளி வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இதுபற்றி உதயகுமாரின் மனைவி மீரா ராஜாக்கமங்கலம் போலீசில் மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்கள் பள்ளியின் மீது கடந்த வாரம் சிலர் தாக்குதல் நடத்தினர். இதுபற்றி போலீசில் புகார் செய்த பின்பு எங்கள் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன் தினம் மீண்டும் பள்ளியின் மீது தாக்குதல் நடந்தது. இரவு 10.30 மணிக்கு மேல் இச்சம்பவம் நடந்துள்ளன. எனவே போலீசாருக்கு இதில் தொடர்பு இருக்கும் என்று நம்புகிறோம். இதுபற்றி உரிய விசாரணை நடத்தி
குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதற்கிடையே இன்று பள்ளியில் உடைக்கப்பட்ட வகுப்பறைகளை தவிர ஏனைய அறைகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டது. மேலும் இன்று பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டமும் நடந்தது. இதில் பள்ளிக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications