2ஜி முறைகேட்டில் சிக்கிய நிறுவனங்களிடம் பணம் கேட்டார் முரளி மனோகர் ஜோஷி! - மிஸ்ரா
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து பாஜக ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பியாகிவிடலாம் என்று கனவு கண்டு அது பொய்த்துப்போனதால் என்னவோ லண்டன் தொழிலதிபர் அனுஸ்மன் மிஸ்ரா இப்போது பாரதிய ஜனதாவுக்கு எதிராக அஸ்திரங்களை அள்ளிவீசி வருகிறார்.
கர்நாடகத்தில் எடியூரப்பா, ராஜ்யசபாவில் கட்காரி மீது காட்டம், குஜராத்தில் சீன்படம் என்று இடியாப்ப சிக்கலில் தவித்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு இப்போது இடியாய் இறங்கியிருக்கிறது அனுஸ்மன் மிஸ்ராவின் குற்றச்சாட்டுகள்!
அனுஸ்மன் யார்.?
லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரான அனுஸ்மன் மிஸ்ரா, நிதின் கட்காரியின் ஆதரவுடன் ஜார்க்கண்ட் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பியாகிவிடலாம் என்று கனவு கண்டு வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் அனுஸ்மனுக்கான கட்காரியின் ஆதரவுக்கு மூத்த தலைவர்களான அத்வானி, சுஸ்மா ஸ்வராஜ், ஜேட்லி, யஸ்வந்த் சின்ஹா என பெரும் தலைகள் எதிர்க்கவே அம்முடிவு கைவிடப்பட்டது. அனுஸ்மான் மிஸ்ராவும் வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.
இதனால் விரக்தியடைந்து போன அவர் இப்போது அதிரடி ஆயுதங்களை பாரதிய ஜனதா மீது வீசி வருகிறார்.
இது பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அனுஸ்மன் மிஸ்ரா கூறியிருப்பதாவது:
பாரதிய ஜனதா கட்சிக்கு நீண்டகாலமாகவே நான்தான் நிதியுதவி செய்துவருகிறேன். பாஜகவின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி, தேர்தலுக்கான நிதி உதவியை என்னிடம் கோரினார்.
இதுமட்டுமல்ல.. தற்போது 2ஜி அலைவரிசையில் சிக்கி உள்ள நிறுவனங்கள் பலவற்றையும் முரளிமனோகர் ஜோஷி நாடி தேர்தலுக்காக நிதி உதவி கேட்டார் என்றார்.
ஜோஷி மறுப்பு
ஆனால் இக்குற்றச்சாட்டை முரளிமனோகர் ஜோஷி மறுத்துள்ளார். "2ஜி அலைவரிசை ஊழல் தொடர்பாக எனது தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நேர்மையாகவே நடைபெறுகிறது. நான் யாரிடமும் தேர்தல் நிதி கோரவ்ல்லை" என்றார்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி சுமமா விடுமா என்ன?
முரளிமனோகர் ஜோஷி மீதான குற்றச்சாட்டுகள் உண்மையெனில் உடனடியாக ஜோஷி தாம் வகித்து வரும் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் நிருபம் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications