தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
மைசூர்: பள்ளி தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஒரு கொடூர தந்தை, பெற்ற மகளையே பிச்சை எடுக்க வைத்தார். இதையொட்டி தந்தையும், அவரது கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் பிரியங்கா (வயது 13). பிரியங்காவின் தாய் இறந்து விட்டார். பிரகாஷ், மைசூர் ஒண்டிகொப்பாவில் உள்ள வங்கி காலனியில் வசித்து வந்தார். அப்போது பிரகாஷுக்கும், அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் ஆஷா (32) என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. திருமணம் ஆகாமலேயே இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். தந்தையுடன் மகள் பிரியங்காவும் வசித்து வந்தார்.
மைசூர் ஜெயலட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிரியங்கா 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் தந்தை பிரகாஷும், ஆஷாவும் சேர்ந்து பிரியங்காவை கொடுமைப்படுத்தி உள்ளனர்.
மதிப்பெண் குறைவால் பிச்சை
பள்ளி தேர்வில் பிரியங்கா குறைந்த மதிப்பெண் எடுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை பிரகாஷும், ஆஷாவும் சேர்ந்து பிரியங்காவை ஒண்டிகொப்பா அருகில் உள்ள கோவில் முன்பு பள்ளி சீருடையுடன் இரவு 7 மணிக்கு பிச்சை எடுக்க வைத்துள்ளனர். பின்னர் பிரகாஷும், ஆஷாவும் கோவில் அருகே மறைந்து இருந்து மகள் பிரியங்கா பிச்சை எடுப்பதை பார்த்து கொண்டு இருந்தனர்.
போலீசில் புகார்
ஏற்கனவே பெற்ற தாயை இழந்த பிரியங்கா, தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை அங்குள்ள பொதுமக்களிடம் கூறி உள்ளார். உடனே பொதுமக்கள் பிரியங்காவை அழைத்து கொண்டு மைசூர் வி.வி.புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார், பிரியங்காவின் தந்தை பிரகாஷை வரவழைத்து விசாரித்தனர்.
அப்போது எனது மகள் பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவளுக்கு புத்தி வரவேண்டும் என்பதற்காக கோவில் முன்பு பிச்சை எடுக்க வைத்தேன். என்று கூறி உள்ளார். மேலும் எனது மகளை பிச்சை எடுக்க வைப்பது என் இஷ்டம். அதை கேட்க நீங்கள் யார்? என்று பொதுமக்களை பார்த்து கேட்டு உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், இதுபற்றி குழந்தைகள் நலத்துறை இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் வளர்ச்சி கமிட்டி தலைவர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து சிறுமி பிரியங்காவை குழந்தைகள் நல வாரிய இலாகாவில் ஒப்படைத்து, பள்ளி படிப்பு, தங்குவதற்கு அனைத்து வசதிகளையும் செய்தனர்.
தந்தை கைது
இந்த சம்பவம் குறித்து மைசூர் வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்காவின் தந்தை பிரகாஷை கையும் கள்ளக் காதலியையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications