கடந்த ஆட்சியில் அதிமுக முறையான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை-பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
கோவை: கடந்த 2008-09 ஆண்டுகளில் முறையான எதிர்கட்சியாக அதிமுக செயல்பட்டிருந்தால் தமிழர்கள் பாதுகாக்கப்பட்டு இருப்பார்கள் என்று பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை வடக்கு மாவட்ட பாஜக ஊழியர் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சி நிர்வாகிகள் இணைப்பு விழா சரவணம்பட்டி எஸ்.எம்.எஸ். மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது
தமிழகத்தில் கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றியுள்ளது. தற்போது மற்ற மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
கடந்த 2009 லோக்சபா தேர்தல் முடிவு வெளியாகி அடுத்த 48 மணி நேரத்தில் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1998 முதல் 2004 வரை வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தமிழர்கள் மீதான சிங்களர்களின் அடக்குமுறை இல்லை.
தற்போது இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதும், மலேசியாவில் இந்து ஆலயங்கள் தகர்க்கப்படுவதும் நடந்து வருகிறது. தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2008-09 ஆண்டுகளில் முறையான எதிர்கட்சியாக அதிமுக செயல்பட்டிருந்தால் தமிழர்கள் பாதுகாக்கப்பட்டு இருப்பார்கள். ஆனால் அவ்வாறு அதிமுக செயல்படவில்லை.
குறிப்பாக திருப்பூர், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் நெசவுத் தொழில் அழிந்து வருகிறது. தொழிலாளர்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. எனவே தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் கட்சியாக பாஜக என்றும் இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications