பெண்களுக்கு சொத்துரிமை, எளிதான விவாகரத்து சட்ட திருத்தம்: மத்திய அரசுக்கு வீரமணி பாராட்டு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பெண்களுக்கு சொத்துரிமை, சுயமரியாதைத் திருமண உரிமை, பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமை, பாலியல் கொடுமை, பெண்ணை மதிக்காமை - பெண்களிடம் கேவலமாக நடந்து கொள்ளல் எல்லாம் ஒழிக்கப்படும் வகையில் இன்று சட்டபூர்வமாக மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் புதிய சட்டங்களால், புதிய திருத்தங்களால் பல்வேறு நல்ல திருப்பங்களைக் கண்டு வருகிறது.
1929ல் பெரியார் நிறைவேற்றிய தீர்மானம் ஆண்களையொத்த சொத்துரிமை பெண்களுக்கும் வேண்டும் என்பது 2005-2006ல் மத்தியில் சட்டமாகி, நடைமுறைக்கு வந்துள்ளது. இணைந்து வாழ முடியாத பெண்கள், மண விலக்கு பெறுவதில் தேவையற்ற சிக்கல்கள், காலதாமதங்களைத் தவிர்த்து அவர்கள் உடனே விலகி, மன நிம்மதியுடன் வாழச் செய்யும் வகையில் அண்மையில் 2010 திருமணச் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 23ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.
பெரியார் வெகு காலமாக சொல்லி வந்த ஒரு கருத்து, மற்ற மேலை நாடுகள் போல விவாகரத்து எளிமையாக்கப்பட வேண்டும் என்பதாகும்.
கணவன்மார்கள் வழக்கை நீட்டி, இழுத்தடித்து மீண்டும் வாழ விரும்புவதுபோல நாடகம் ஆடுவதை தற்போது உள்ள சட்டம் அனுமதிக்கும் நிலை - புதிய சட்டத் திருத்தம் மூலம் இனி முடியாது. காத்திருக்கும் காலம் என்பது ரத்து செய்யப்பட்டு இரண்டு பேரும் இணைந்து தந்த மணவிலக்கு மனுவினை நீதிமன்றங்கள் ஏற்று அனுமதி அளிக்க வழி செய்கிறது. மணவிலக்கு பெற்ற நிலையிலும் கணவன் சொத்தில் மனைவிக்கு உரிமை தர வேண்டும் என்பதும் முக்கிய திருப்பமாகும்.
பெரியாரின் திராவிட இயக்கக் கொள்கைகள், அம்பேத்காரின் முயற்சிகள் என்னும் சூறாவளி எங்கும் சுழன்றடிக்கிறது. இது மேலும் நல்ல சமுதாய மாறுதலை உருவாக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications