எப்போதாவது சட்டமன்றத்தில் மரபுகளைக் கடைப்பிடித்திருக்கிறதா?: கருணாநிதி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 26-3-2012 அன்று தமிழக அரசின் சார்பில் 2012-2013ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட பிறகு, முதல்வர் ஜெயலலிதா 23, 24, 25-3-2012 ஆகிய நாட்களில் சில அறிவிப்புகளை பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிவித்தார். அந்த அறிவிப்புகளையும் பட்ஜெட் அறிக்கையில் தானே செய்திருக்க வேண்டும், முதல்வர் அதற்கு முன்பே இவ்வாறு அறிவிக்கலாமா? என்று கேட்டு திமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது.
அதற்கு ஜெயலலிதா, அந்த அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே படிக்கப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது தான் என்றும், புதிய அறிவிப்புகள் இல்லை என்றும் பேரவையில் தெரிவித்திருக்கிறார். அதையொட்டி அவரது பதிலில் என் பெயரும் இழுக்கப்பட்ட காரணத்தால் நான் விளக்கமளிப்பது எனது கடமை என கருதுகிறேன்.
கடந்த ஆண்டு செய்யப்பட்ட அறிவிப்பினை இதுவரை நிறைவேற்றாமல் இருந்தால், அதனை இந்த ஆண்டு பட்ஜெட் அறிக்கையிலே குறிப்பிட்டுவிட்டு, அதன் மீது எடுக்கப்பட்ட முடிவினை அறிவிப்பாக இந்த ஆண்டு பட்ஜெட் அறிக்கையிலேயே தெரிவித்து இருக்கலாமே. அதைத்தான் திமுக சுட்டிக்காட்டியது.
ஜெயலலிதா தனது பதிலில் பட்ஜெட் அறிக்கை தாக்கல், நிதியமைச்சரின் பதிலுரை, காவல்துறை மானிய விவாதத்திற்கு முதல்வரின் பதிலுரை போன்ற முக்கிய நிகழ்வுகளை எல்லாம் புறக்கணிப்பது என்பதுதான் திமுகவினர் காலம் காலமாக கடைப்பிடிக்கும் மரபு என்று சொல்லியிருக்கிறார்.
2006ம் ஆண்டு முதல் 2011 வரை திமுக ஆட்சியிலே இருந்த போது ஜெயலலிதா தலைமையில் அவையிலே இருந்த அதிமுக எப்போதாவது இந்த மரபுகளைக் கடைப்பிடித்திருக்கிறதா?
கவர்னர் உரையாற்றத் தொடங்கும்போதும், பட்ஜெட் அறிக்கையைப் படிக்கத் தொடங்கியபோதும் அதிமுக வெளிநடப்பு செய்த செய்தி பத்திரிகைளில் எல்லாம் இப்போதும் உள்ளது. எனவே இது திமுகவுக்கு உரிய மரபு அல்ல. அதிமுக கடந்த காலத்தில் நடத்திக் காட்டிய மரபு. அதை அப்படியே மறைத்துவிட்டு, இப்போது திமுக தான் புதிதாக வெளிநடப்பு செய்கிறது என்பதைப்போல பேரவையில் தவறான தகவலைத் தந்துள்ளார்.
19-3-2010 அன்று பட்ஜெட் அறிக்கையைப் புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு செய்ததோடு, வெளியே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம், விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது, மேலும் புதிய சட்டப் பேரவைத் திறப்பு விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் முறையாக அழைக்கப்படவில்லை. இவற்றைக் கண்டித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.
7-1-2011 அன்று கவர்னர் உரையாற்றத் தொடங்குவதற்கு முன்பு அதிமுகவினர் கருப்புச் சட்டையையும், காய்கறி மாலையை கழுத்திலும் அணிந்து வந்து கவர்னருக்கு முன்னால் கோஷங்களை எழுப்பி விட்டுச் சென்றனர்.
5-2-2011 அன்று பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோதும், அதிமுக அணி கட்சிகள் புறக்கணித்து வெளியேறினர்.
அவையின் நாகரிகத்தைப் பற்றிப் பேசுகிற முதல்வருக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன். "துணை முதலமைச்சர் பதவி வகித்த ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியிருப்பது, அவரது அறியாமையைக் காட்டுகிறதா'' என்று ஒரு முதல்வர் தனது பதிலில் கேட்பது தான் நாகரிகமா? அது தான் அவை மரபா? சட்டமன்றத்திலே உள்ள ஒரு கட்சியின் தலைவரைப் பார்த்து "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ'' என்று பேசுகிறார் என்று கூறுவது தான் முதல்வருக்கு மரபா?
26-11-1980ல் திருச்செந்தூர் கோவில் வளாக விடுதியில் அறநிலையத்துறையின் உதவி ஆணையாளர் சுப்பிரமணியப் பிள்ளை அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக அறங்காவலர்களால் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சி.ஜெ.ஆர்.பால், அரசிடம் அறிக்கை கொடுத்து- அந்த அறிக்கை அரசுக்கு சாதகமாக இல்லாததால் அதனை பல மாதங்களாக வெளியிடாமல் அரசு மறைத்த நேரத்தில்- எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் அந்த அறிக்கையை 24-11-1981 அன்று பத்திரிகைகள் வாயிலாக வெளியிட்டேன்.
ஜெயலலிதா சொல்லியிருப்பதுபோல அது என்ன பேரவை மரபுக்கு மாறான செயலா? நாடாளுமன்றத்திலேயே பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிரான இதுபோன்ற அறிக்கைகளையெல்லாம் வெளியிட்டிருக்கிறார்களே?
எனவே அவையிலே பேசுவதற்கும், வெளிநடப்பு செய்வதற்கும் எல்லா கட்சிகளுக்கும் உரிமை உண்டு. முன்மாதிரிகள் ஏராளமாக உண்டு என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications