ராமஜெயம் கொலை: தொண்டர்களை சமாதானப்படுத்த எனக்கு வழி தெரியவில்லை- கருணாநிதி

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் இன்று காலை கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கல்லணை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் போலீஸார் கண்டெடுத்தனர்.
ராமஜெயம் படுகொலையால் திமுகவினரும், நேரு குடும்பத்தாரும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். திருச்சியில் பெரும் பதட்டம் காணப்படுகிறது.
இந்த படுகொலைக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். ராமஜெயம் குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்து அவர் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு தேர்தலிலும் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக புயல் வேகத்தில் செயல்படக் கூடியவர் ராமஜெயம். ஏதோ தானே போட்டியிடுவது போல நினைத்துக் கொண்டு அவர் செயல்படுவார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சி தருகிறது.
ராமஜெயத்தின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியிருக்கும் எனது தொண்டர்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை.
இந்த இக்கட்டான நிலையில் திமுகவினர் அமைதி காக்க வேண்டும், பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று அவர் திமுகவினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications