நேபாளத்துல இத்தனை நாட்களுக்கு என்ன வேலை: வி.கே.சிங்கிடம் பாதுகாப்பு அமைச்சகம் கிடுக்கிப்பிடி

வயது பிரச்சினை, ஊழல் குற்றச்சாட்டு, பிரதமருக்கு எழுதிய கடிதம் வெளியானது ஆகிய பிரச்சினைகளால் ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த ராணுவ தளபதியின் இஸ்ரேல் பயணத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இஸ்ரேலில் பாதுகாப்பு நிலைமை சரியில்லை என்ற காரணத்தை கூறி, அப்பயணம் ரத்து செய்யப்பட்டது.
நேபாள பயணம்
இந்நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில், பேரிடர் மேலாண்மை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான 2 நாள் கருத்தரங்கம், 4 மற்றும் 5-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க 4 நாட்கள் பயணமாக, வி.கே.சிங், அதிகமான பிரதிநிதிகளுடன் செல்ல திட்டமிட்டு இருந்தார்.
ஆனால், அவர் அங்கு தங்கும் நாட்களையும், பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் பாதுகாப்பு அமைச்சகம் குறைத்துள்ளது. இந்த பயணம், கருத்தரங்கத்துக்கு மட்டுமே என்பதால், கருத்தரங்கம் முடிந்த பிறகும் தங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், தளபதியின் பயண நாட்கள் குறைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதன்படி, 4-ந் தேதி புறப்படும் வி.கே.சிங், 6-ந் தேதி டெல்லி திரும்புகிறார். பயண நாட்கள் குறைப்புக்காக, அவர் இந்த பயணத்தை ரத்து செய்ய மாட்டார் என்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரஙகள் தெரிவித்தன.
ரவிரிஷி மீதான பிடி இறுகுகிறது
இதற்கிடையே, தரம் குறைந்த டாட்ரா லாரிகளை ராணுவத்துக்கு சப்ளை செய்ததில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில் ரவி ரிஷி, நாட்டை விட்டு வெளியேற சி.பி.ஐ. தடை விதித்துள்ளது. இவர் லண்டன்வாழ் இந்திய தொழில் அதிபர். வெக்ட்ரா குழும அதிபரான இவர், டாட்ரா லாரிகள் நிறுவனத்தில் பெரும் பங்குகள் வைத்துள்ளார்.
இந்த முறைகேடு தொடர்பாக இவரது பெயரையும் சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவரிடம் ஏற்கனவே 2 முறை விசாரணை நடத்தி விட்டது. மீண்டும் சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க இந்த தடை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. அனைத்து விமான நிலையங்கள் மற்றும் வெளியேறும் வழிகளை சி.பி.ஐ. உஷார்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications