வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புலிகள் பதுங்கியுள்ளனராம்... புரளியைக் கிளப்பும் இலங்கை
கொழும்பு: தனக்கு சர்வதேச அளவில் ஏதாவது நெருக்கடி வந்து விடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது விடுதலைப் புலிகள் இன்னும் அழியவில்லை. நடமாடிக் கொண்டுதான் உள்ளனர் என்று கூறி வரும் இலங்கை அரசு தற்போது தனது ஐலண்ட் பத்திரிக்கை மூலமாக தமிழகத்திலிருந்து ஆயுதப் பயிற்சி பெற்று 150 விடுதலைப் புலிகள் மீனவர்கள் என்ற போர்வையில் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுறுவியுள்ளதாகவும், நடமாடி வருவதாகவும் புரளியைக் கிளப்பி விட்டுள்ளது.
இது குறித்து தி ஐலேண்ட் நாளிதழில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் உள்ள 3 ரகசிய முகாம்களில் ஆயுதப் பயிற்சி முடித்த 150 தீவிரவாதிகள் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பதுங்கி நாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்து வரும் சமர முயற்சிகளை கெடுப்பதே அவர்களின் நோக்கம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் திரிகோணமலையில் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 3 விடுதலைப் புலிகள் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தான் அவர்களின் நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தது.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு இந்தியாவுக்கு தப்பியோடிதாகவும், தமிழகத்தில் பயிற்சி பெற்று மீனவர்கள் போர்வையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பியதாகவும் அந்த 3 பேர் தெரிவித்துள்ளனர். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த பல கொலைகளுக்கு இவர்கள் காரணமாக இருக்கலாம் என்று உளவுத் துறை சந்தேகிக்கிறது.
அந்த 3 பேருக்கும் விடுதலைப் புலிகளுடனான தொடர்பு உறுதிபடுத்தப்பட்டதையடுத்து அவர்கள் தீவிரவாத விசராணை துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் உடல் அருகே ஒரு துண்டுச்சீட்டில் "துரோகிகளுக்கு மரணம். நாங்கள் திரும்பி வந்துவிட்டோம்- விடுதலைப்புலிகள்" என்று எழுதியிருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொரு நாளிதழான தி டெய்லி மிரரில் கூறியிருப்பதாவது, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் கொலை வழக்கில் சிக்கியுள்ள அந்த 3 பேரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்று விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு தகவல்களை கிரகிக்க முடிந்த இலங்கை உளவுப் பிரிவினரால் தமிழகத்தில் எந்த இடத்தில் ஆயுதப் பயிற்சி நடந்தது, யார் கொடுத்தது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லையோ....
சர்வதேச அளவில் தற்போது ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் செமத்தியாக மூக்குடைபட்டது இலங்கை. இதன் மூலம் சர்வதேச கண்காணிப்பின் கீழ் அது வந்து விட்டது. இதனால் கடுப்படைந்துள்ள இலங்கை அரசு தற்போது விடுதலைப் புலிகள் வந்து விட்டார்கள் என்று புதிய குண்டைப் போட்டு குளிர் காய நினைப்பதாகவும், அப்பாவித் தமிழர்களுக்கு உதவும் எண்ணம் இன்னும் கூட இலங்கை அரசுக்கு வரவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications