பன்றிக் காய்ச்சல்: சென்னை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய இருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்
சென்னை: சென்னையில் 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பி ஓடிய இருவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பன்றிக் காய்ச்சல்
கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலக நாடுகளில் பரவிய பன்றிக்காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். வைரஸ் கிருமி காரணமாக பரவும் இந்த நோயால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. இதை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் விமான நிலையத்தில் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. மராட்டியம், ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் தாக்குதல் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் பன்றிக் காய்ச்சல்
பன்றிக்காய்ச்சல் சென்னையிலும் வேகமாக பரவி வருகிறது. கோட்டூர்புரத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவன மேலாளர் டெல்லி சென்று வந்த பிறகு அவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் ஏற்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கும் பன்றிக்காய்ச்சல் இருப்பது கிண்டி கிங் இன்ஸ்டிடிïட்டில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் அவர்கள் வீட்டிலேயே தனியறையில் வைத்து சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். தற்போது அவர்கள் தங்கள் வீடுகளில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
மேலும் 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல்
இந்நிலையில் நேற்று மேலும் 2 சிறுவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களின் தொண்டை பகுதியில் இருந்த சளி மற்றும் அவர்களில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டது. இந்த பரிசோதனையில் அந்த 2 பேருக்கும் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேருக்கும் தனியறையில் வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அவர்களது பெற்றோர்கள் பன்றிக்காய்ச்சல் என்ற தகவலால் அதிர்ச்சி அடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டனர்..
போலி முகவரி
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நோயாளிகள் கொடுத்திருந்த முகவரிக்கு நேற்று மதியம் சென்று பார்த்தனர். ஆனால் அவர்கள் அங்கு சென்ற பிறகு தான் அந்த முகவரியில் அந்த நபர்கள் வசிக்கவில்லை என்பது தெரியவந்தது. போலி முகவரி கொடுத்து விட்டு அவர்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. நோய் விவரங்கள் வெளியே தெரிந்து விடும் என்பதற்காக அவர்கள் போலி முகவரி கொடுத்து விட்டு சென்று இருப்பது தெரியவந்தது. மாயமான அந்த 2 நபர்களையும் தேடி பிடிக்கும் பணியில் தற்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தயார் நிலையில் மருந்துகள்
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, "பன்றிக்காய்ச்சல் நோய்களை தீர்ப்பதற்கான மருந்துகள் வெக்சிபுளு' என்ற தடுப்பூசியும், நேசோவேக் என்ற மூக்குவழியாக செலுத்தும் மருந்தும், டாமிபுளு' மாத்திரைகளும் தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளது.
பன்றிக்காய்ச்சல் நோய் இருப்பது தெரியவந்தால் நோயாளிகள் யாரும் அச்சப்பட தேவையில்லை. பயந்து ஓடவும் தேவையில்லை. அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இதற்கிடையே, சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை சார்பில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் வரும் பயணிகளை பரிசோதனை செய்வதற்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரிசோதனை கூடம் அமைப்பதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications