இந்தியக் கடற்படையில் ரஷ்ய அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் 'நெர்பா'

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கப்பல் தளப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி முறைப்படி 'நெர்பா' கப்பலை கடற்படைக்கு அர்ப்பணித்தார். இக்கப்பல் அகுலா - 2 ரகத்தை சேர்ந்ததாகும். இந்திய கடற்படையில் நெர்பாவுக்கு ஐ.என்.எஸ். சக்ரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன் 1988ம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த சார்லி ரக அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா குத்தகைக்கு எடுத்திருந்தது.
இப்போது நெர்பாவையும் 10 ஆண்டுக் குத்தகைக்குத்தான் இந்தியா எடுத்துள்ளது. இந்தக் குத்தகைக்காக ரூ. 4,500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் 2004-ம் ஆண்டு கையெழுத்தானது. இதன் மூலம் இந்திய கடற்படையினருக்கு இத்தகைய கப்பலை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களால் மாதக் கணக்கில் நீருக்கடியில் இருக்க முடியும். மேலும், 600 மீட்டர் ஆழம் வரை இந்தக் கப்பலால் நீருக்கடியில் செல்ல முடியும்.
விரைவில் கடலோரக் கண்காணிப்புப் பணியில் ஐஎன்எஸ் சக்ராவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹந்தும் ஈடுபடும்.
நெர்பா கப்பலை கடந்த 2008ம் ஆண்டே இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைப்பதாக இருந்ததது. ஆனால் பயிற்சி ஓட்டத்தின்போது பல ரஷ்ய வீரர்கள் உயிர் இழந்ததால் ஒப்படைப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயிற்சி ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டடதையடுத்து தற்போது நெர்பா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications