குடிபோதையில் விமானிகள் சிக்கினால் 5 ஆண்டுகளுக்கு உரிமம் ரத்து
டெல்லி: விமானிகள் குடிபோதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் முதல் முறை 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுவார். மறுபடியும் குடிபோதையில் சிக்கினால் அவர்களின் உரிமம் 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என்று விமான சேவைகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
விமானத்தில் ஏறுவதற்கு முன்பு நடத்தப்படும் சோதனையின்போது பல விமானிகள் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் விமானிகள் குடிபோதையில் இருப்பது அதிகரித்து வருகிறது. பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானிகள் குடிபோதையில் இருந்து சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விமான சேவைகள் இயக்குனரகம் குடிபோதை விமானிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க முடிவு செய்துள்ளது. யாராவது விமானி குடிபோதையில் இருப்பது தெரிய வந்தால் அவர் முதன்முறையாக சிக்கியிருந்தால் அவர் 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுவார். மறுபடியும் குடித்துவிட்டு வந்தால் அவரது உரிமம் 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என்று விமான சேவைகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மூத்த விமானி, பரிசோதிக்கும் விமானி விமானத்தை எடுக்கும் முன்பு நடத்தப்படும் சோதனையில் குடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் தனது பதவியை 3 ஆண்டுகள் இழப்பதோடு மேற்கூறிய தண்டனைகளும் கிடைக்கும்.
விமானிகள் விமானத்தை இயக்குவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு வரை குடித்திருக்கக் கூடாது.
கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 57 விமானிகள் குடிபோதையில் சிக்கினர். ஆனால் அவர்களில் 11 பேர் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications