எங்களுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் மன்மோகன் பதவி பறிபோயிருக்கும்: இலங்கை
கொழும்பு: ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருந்தால் இந்நேரம் பிரதமர் மன்மோகன் சிங் பதவி பறிபோயிருக்கும் என்று இலங்கை அமைச்சர் டி.யு. குணசேகரா தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தொடர்பான சிறப்பு விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் டி.யு.குணசேகரா கூறுகையில்,
இறுதிகட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தே ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. 1983 கறுப்பு ஜூலை பற்றியோ, 1988ல் நடந்த அரசு பயங்கரவாதம் பற்றியோ சர்வதேச அளவில் கேள்வி எழுப்பப்படவில்லை. போரில் மக்கள் இறப்பது சகஜம் என்று ஆப்கானிஸ்தான் போரின்போது அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
ஆனால் உறுதிபடுத்தப்படாத குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை மீது கேள்வி எழுப்பப்பட்டதன் மூலம் அமெரிக்கா இரட்டை வேடம் போடுவது தெரிகிறது. போரின் இறுதி நாட்களில் சண்டையை நிறுத்தவும், ஐ.நா. படையை அனுமதிக்கவும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. அதனை நாம் ஏற்க மறுத்ததால் தான் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததால் அது மேற்கு நாடுகளுடன் சேர்ந்துவிட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இங்கு பிரச்சனை ஏற்பட்டால் அது தமிழகத்தில் பிரதிபலிக்கும். இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் இந்தியா மீது எந்த விரோதமும் இல்லை. இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தாலும் அது இரு நாடுகளுக்கிடையேயான உறவை பாதிக்காது.
இந்தியா மட்டும் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தால் மன்மோகன் சிங் பதவியில் இருந்திருக்க முடியாது. இந்தியா தந்திரமாக இப்படி செய்துள்ளது. அதற்கு உள்நாட்டு பிரச்சனைகள் இருக்கும். தமிழகத்தின் நெருக்கடியால் தான் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications