ஆம்புலன்ஸில் வந்து ஸ்ட்ரெச்சரில் படுத்துக் கொண்டே தேர்வு எழுதிய சென்னை மாணவர்
சென்னை: சென்னையில் இடுப்பு எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆம்புலன்ஸில் வந்து ஸ்ட்ரெச்சரில் படுத்த படுக்கையாக இருந்து கொண்டே தேர்வை எழுதினார்.
சென்னை நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமிபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் அகிலன் ஸ்ரீகிருஷ்ணசாமி. 10 வகுப்பு மாணவர். படிப்பில் கெட்டிக்காரர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டுப்படி ஏறியபோது அவர் கால் தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது. உடனே அவர் அண்ணா நகரில் உள்ள சவுந்தர பாண்டியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதும் நேரத்தில் அகிலன் படுத்த படுக்கையாகிவிட்டர். இந்நிலையில் இன்று 10ம் வகுப்பு தேர்வு துவங்கியது. என்ன வலியாக இருந்தாலும் சரி, தேர்வை எழுதியே தீருவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் கல்வி அதிகாரிகளை சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறி அகிலன் தேர்வு எழுத ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து இன்று காலை 9.30 அகிலன் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார். ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்த அவரை சிறப்பு அறைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவர் படுத்துக் கொண்டே விடைகளைக் கூற ஆசிரியை ஒருவர் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்ததும் ஆம்புலன்ஸில் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து அகிலனின் பெற்றோர் ராகவசுவாமி, கவிதா கூறுகையில்,
எங்கள் மகன் கீழே விழுந்ததில் இடிப்பில அடிபட்டு அறுவை சிகிச்சை செய்தபோது நாங்கள் துடிதுடித்து விட்டோம். அடுத்த முறை தேர்வை எழுதலாம் என்று நாங்கள் கூறியும் அவன் தேர்வை எழுதுவேன் என்று உறுதியாக இருந்தான். மாதிரி தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்திருந்தான். இந்நிலையில் தேர்வு எழுதமுடியாமல் போய்விடுமோ என்று கலங்கினான். உன்னால் முடியும் என்றால் நாங்கள் கல்வி அதிகாரிகளை சந்தித்து பேசுகிறோம் என்றோம். அவன் தன்னம்பிக்கை தான் இன்று அவனை தேர்வு எழுத வைத்துள்ளது.
அவன் தேர்வு எழுத அனுமதி அளித்த கல்வி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவி்த்துக் கொள்கிறோம் என்றனர்.
ஆம்புலனஸ் வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.1,500 செலுத்த வேண்டும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவனது பெற்றோர் மகனின் மகிழ்ச்சிக்காக செயல்படுகின்றனர். அவருடன் வந்து தேர்வு மையத்திற்கு வெளியே இருந்த மரத்தடியில் இருந்துவிட்டு, மகன் தேர்வை முடித்ததும் அவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். அகிலன் குணமாக இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால் அவர் அனைத்து தேர்வுகளுக்கும் ஆம்புலன்ஸில் தான் வர வேண்டிய நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications